பூக்களே புன்னகை பூக்கும் மலர்களே

பூக்களே புன்னகை பூக்கும் மலர்களே
சிந்திடும் புன்னகை சிந்தாத தேன்கிண்ணம்
தேனிக்கென் றேஏந்தி நிற்கும்நின் பேரழகும்
தென்றல் வரவேற்கும் உன்விருந் தோம்பலும்
என்னை எதிர்நோக்கி காத்திருக்கும் காதலும்
பண்பு தனில்தமிழே பாவலன் நற்பரிசே
வாழ்த்துவேன் காதலில் நான் !
---கவின் சாரலன்
பல விகற்ப பஃறொடை வெண்பா
5 லிருந்து 12 அடி வரை பஃறொடை வெண்பா எனப்படும்
வெண்பா கவிதைகளில் பேரழகி பேரரசி !
அதன் குறள் வடிவம்தனில் இன்றும் கோலோச்சுகிறான்
வள்ளுவன்.
அதன் நேரிசையில் மனவீதிகளில் வானம் பாடியாக
காவியம் பாடித் திரிகிறான் புகழேந்தி .
உங்களுக்கும் விருப்பமா ? முயலுங்கள் !