கரைந்து போன கவிதைகள்

அன்பே ..! நீயில்லாத எனது
இரவுகள் உன் நினைவுகளோடு
புரண்டு புரண்டு படுப்பதிலேயே
கழிந்து போகிறது ...

உறக்கம் தழுவாத விழிகள்
பகலெல்லாம்
சிவந்து வலிக்கிறது ..!

நிமிஷங்கள் யுகங்களாய்
நீண்டு பயமுறுத்துகிறது.

வெறுப்பும் விரக்தியும்
'தாம் தூமெ'ன்று
குதித்து மிதித்து வாழ்வை
நசுக்கிக் கொண்டிருக்கிறது.

சுய நலத்தோடு என்னை
உதறிச்சென்று இன்று
குடியும் குடித்தனமுமாய்
திளைத்துக் கொண்டிருக்கும் ,

இதயமும் இரக்கமும் இல்லாத
உனக்கு எனது புலம்பல்கள்
புரியப் போவதுமில்லை..
தேவையுமில்லை ..


அதனால்தான் எனக்கு நானே
எழுதி வாசித்து
ஆறுதல் தேடிக் கொண்டிருக்கிறேன்.
ஒருவேளை என்றாவது ஒருநாள்,
இவை உன் கைகளில் கிடைக்கும் பொழுது
இடை இடையே
கவிதை வரிகள் அழிந்து போயிருந்தால்,

அது மீண்டும் மீண்டும் நான் வாசித்துத்
தாங்காத சோகத்தில் வடித்த
கண்ணீர் துளிகளில் கரைந்து
போய் விட்டதாய்ப் புரிந்துகொள்..!

- ஆ.மகராஜன்

எழுதியவர் : ஆ.மகராஜன் (30-Dec-16, 5:20 pm)
சேர்த்தது : ஆமகராஜன்
பார்வை : 941

மேலே