என்னருகில் நீஇருந்தால் - தரவு கொச்சகக் கலிப்பா
என்னருகில் நீயிருந்தால் எல்லையிலா இன்பங்கள்
உன்கண்கள் பேசிடுமே உருவமிலா உரையாடல் .
பன்மொழியும் காட்டிடுவாய் பருவமகள் நீதானே .
என்மொழியும் மறந்திடுமே என்செய்வேன் சொல்வாயே !
மந்திரமாம் காதலிலே மயங்கிநானும் நின்றிடவே
அந்தநாளின் நினைவுகளில் அகலவில்லை அன்புமனம் .
இந்தநாளும் எண்ணியெண்ணி இனிமையினை உணர்கிறேன் .
எந்தநாளும் நீவேண்டும் என்னவளே என்னருகில் !
மரக்கிளைமேல் அமர்ந்துகொண்டு மனத்தையும் தூண்டுகின்றாய் .
கரம்கொடுத்தல் கூடாதோ காளைநானும் காத்திருக்கச்
சிரமம்தான் சித்திரமே சிந்தையிலே நம்காதல்
உரமாகிப் போய்விடவே உறவாட நீவாராய் !
பெண்மகளே பேசிடுவாய் பேதைமனம் தேடுகிறதே
கண்களினால் நீவருடக் காதலினால் நோயுறவும்
வண்ணமகள் வாய்திறந்து வாட்டத்தைப் போக்கிடுவாய் !
எண்ணமெலாம் உன்னிடமே எத்திக்கும் நீயடியோ !
கலைமகளே என்னருகில் காதலினால் வந்திடுவாய்
மலைமகளே மரகதமே ! மறக்காதே என்னையும்தான் !
சிலைபோன்றே இருக்கின்றாய் சிற்பிசெய்த கலையழகே !
மலைபோன்ற துன்பங்கள் மாணிக்கமே மாற்றவாராய் !!!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்