பயந்த சமுதாயம்

அன்பிருக்கும், அதற்கேற்ப அழகிருக்கும், வாழ்வை
=அனுசரித்து நடக்கின்ற அமைப்பிருக்கும், உலகில்
இன்றிருக்கும் ஆடம்பரம் இலாதிருக்கும், நல்ல
=இறைபக்தி நிறைந்திருக்கும், இயன்றளவு மூத்தோர்
நன்மதிப்பைப் பெற்றிருக்கும், நாகரீகம் கொண்டும்
=நாலுகுணம் மறவாத நல்லொழுக்கத் தோடே
பொன்னெனவே மின்னுகின்ற பெண்ணிருக்கும் , இருந்தும்
=பொருளற்றக் காரணத்தால் புழுங்கியழு திருக்கும்.

சொல்லிருக்கும் சுயமாக சிந்தித்து முடிவு
=செய்கின்றத் திறனிருக்கும், சேய்பெற்றுக் கொடுக்கும்
வல்லமையை வளர்த்திருக்கும், வாழ்தலிலே அந்த
=வள்ளுவனின் வாசுகியை வார்த்தெடுத்த அம்சம்
செல்வமென நிறைந்திருக்கும். சேர்ந்தானின் உறவைச்
=சீராட்டிப் பாராட்டும் சிறப்பிருக்கும் , இருந்தும்
இல்லாளாய் வருவதெனில் இலட்சங்கள் நீட்டும்
=இலட்சணங்கள் இல்லாமல் இல்வாழ்வை மறக்கும்.



கண்ணிருக்கும் , காணுகின்ற காளையரை அந்தக்
=கலையழகு பூமுகமோ கவர்ந்திழுக்கும். நீல
விண்ணிருந்தே ஒளிசிந்தும் வெண்ணிலவை விஞ்சும்
=விடலைப்பெண் வேள்விழிக்குள் வீழ்ந்திருக்கும் மோகம்
மண்ணிருந்து வெடிக்கும்எரி மலைபோன்று கனன்று
=மணமுடித்துக் கொள்வதற்கும் மனசிருக்கும். ஆனால்
பெண்ணெடுக்க முடிவெடுத்து பெற்றோரைக் கேட்கப்
=பெருஞ்சாதித் தீமூண்டு பேரன்பை எரிக்கும்.

பெண்ணின்றி ஆணில்லை பேச்சுக்களில் மட்டும்
=பெரிதாக தத்துவங்கள் நிறைந்திருக்கும். நாட்டின்
கண்ணெனவே அவளென்று காகிதத்தில் எழுதும்
=கவிஞர்களை வளர்த்தெடுக்கும், காவியங்கள் செய்து
பண்பாடு காக்கின்ற பரம்பரைகள் என்று
=பார்போற்ற புகழ்ந்திருக்கும், பத்தினியர் வாழப்
பண்பற்று கேட்கின்ற பணமென்னும் பேயைப்
=பக்குவமாய் ஒட்டுதற்கே பயந்தேதான் இருக்கும்.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (17-Mar-17, 3:47 pm)
பார்வை : 102

மேலே