வாணிக்குக் கடனறிவுறுத்தல்

12 வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம் !
வாணிக்குக் கடனறிவுறுத்தல்

ஒளிமிகும் வாணி ! உன்றன்
. ஒண்பதம் பற்றிக் கொண்டு
களியுறச் சிலவே கேட்பேன்
. கடனெனச் செய்தல் வேண்டும் !
தெளிவுடன் வாழ்க்கைப் பாடத்
. தேர்ச்சிய தற்காய்ப் பள்ளி
வெளியிலெம் மாணாக் கர்செய்
. வேள்வியை அணித்துக் காப்பாய் !

தேர்வுகள் என்ப தெல்லாம்
. தேடியே பெறுவ தென்றும்
தேர்வுகள் என்ப துள்ளத்
. தெளிவினைத் தருவ தென்றும்
தேர்வுகள் வலிமை ஓங்கத்
. தேவையே என்றும் வெற்றி
வார்த்தைகள் அவர்நெஞ் சுள்ளே
. வார்த்தவர் வேள்வி காப்பாய் !

உன்னரும் பிள்ளை கட்கோர்
. உன்னதத் தேர்வென் றால
துன்றனுக் குற்ற தன்றோ !
. உடல்வலி, உள்ளத் திண்மை,
மின்னலா யெழுதும் ஆற்றல்,
. மீண்டெழும் ஞானம், கேள்வி
வென்றிடும் சக்தி தந்தே
. வேள்வியும் வெல்லக் காப்பாய் !

எண்ணிய விடையைக் கைகள்
. எழுதிடும் வேகம், தாளின்
நுண்ணிய கேள்வி கட்கும்
. நுண்விடை காணும் தன்மை
கண்ணிலே சோதி மற்றும்
. கருத்திலே கற்ற தெல்லாம்
வண்ணமா யிருக்க வைத்தல்
. வாணிநின் கடமை யன்றோ !

சொல்லிய செயல்கள் செய்வாய்
. சொர்க்கமென் றாகும் நாடு
கல்வியில் லாயி ருட்டுக்
. கயமைபோம் ! விடியல் சேரும் !
வல்லமைக் கல்வி யாலே
. வளைப்பதவ் வமர மன்றோ !
சொல்லினுக் கிறைவீ ! மக்கள்
. சொலித்திடும் வகைசெய் வாயே !

- விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (27-Mar-17, 12:09 am)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 33

மேலே