பூ விரியும் கணம்

பூவிரியும் கணம் புதிர்பரப்பும் அதைப்
புரிந்திடும் வழியில்லையே ! - நெஞ்சில்
பாவிரியும் கணம் பகன்றிடக் கூடுமோ ?
பாலனுக் கறிவில்லையே !
தாவிடும் ஓடையில் தண்ணீரை யன்றியோர்
தனியர சேதுமுண்டோ ? - நெஞ்சக்
காவினி லேயுன் களிநட மின்றிக்
கவிதைகள் ஏதுமுண்டோ ? - சக்தி
கவிதைகள் ஏதுமுண்டோ ?

பூத்திருக்கும் மதி பார்த்திருக்கும் காலை
புலர்ந்ததும் மறைவதைப்போல் - உன்னைப்
பார்த்திருக்கும் மனப் பாவம் அழிந்தது
பாடிடும் திறன்வந்தது !
ஆர்த்திருக்கும் மனம் அமைதியில் நின்றது
ஆனந்தமே வந்தது ! - வினை
கோத்திருக்கும் எனை கொள்கை அகன்றது !
கோவிலின் சுடர்வந்தது ! - சக்தி
கோவிலின் சுடர்வந்தது !

வான்மழைக் கேங்கியே வாடிடும் மண்ணென
வாசலில் வீழ்ந்திருந்தேன் - உள்ளில்
நானெனும் ஆணவம் நாட்டியம் செய்திட
நாசத்திலே கிடந்தேன் !
தேனெனும் உன்பெயர் தென்றல் உரைத்தது
தேவைகள் தீர்ந்ததம்மா ! - புதுப்
பானு பிறந்தது ! இருளும் அகன்றது
பாடல் தெரிந்ததம்மா ! - எனக்குன்
பாதம் தெரிந்ததம்மா !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (12-May-17, 2:12 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 69

மேலே