கவிஞர் பழனி குமார் அவர்களுக்கு அறுபதாம் பிறந்தநாள் வாழ்த்து

அறுபதைத் தொட்ட தமிழ்க்கவி நின்னை
அன்புடன் வாழ்த்திட வந்தேன் !
குறுநகை யோடு கொள்கையிற் சிறந்து
குவலயம் போற்றிட வாழி !
இறுக்கிடும் நோயும் இனியுனைக் கண்டால்
இடறியே ஓடிட வேண்டும் !
நறுமணப் பூவின் தூய்மையைப் போலே
நலமுடன் நண்பனே வாழி !

சிறுமைகள் கண்டால் பொங்கியே எழுந்து
திருத்திடப் பாச்சரம் தொடுப்பாய் !
பொறுப்புடன் எழுத்தால் கொடுமைகள் தீர
புரிந்திட வைக்கவே முயல்வாய் !
பெறுமதி யோடே அறிவுரை சொல்லி
பெருமைகள் சேர்த்திட நினைப்பாய் !
நொறுங்கிடா வண்ணம் உள்ளமும் பூக்க
நூறினைத் தாண்டியும் வாழி !

அறவழி நின்று பண்புடன் வாழும்
அருந்தமிழ்ச் சோதரன் நீயே !
உறவுகள் மதிக்க மனிதமும் பேணும்
உயர்குணம் கொண்டவன் நீயே !
விறலுனைத் தொடர சாதனை புரிய
விருப்பொடு கவிவடிப் பாயே !
சிறப்புடன் வாழ உளநிறை வோடு
சியாமளா வாழ்த்திடு வேனே !!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (11-Oct-17, 7:57 pm)
பார்வை : 341

மேலே