எனக்குள் அவள்

பள்ளி பருவத்தில் பழகும் போதே

எனக்குள் அவள்

பாதி நாட்கள் போனபின்னும்
எனக்குள் அவள்

தேடி அலைந்ததில்லை
தெருவெங்கும் போனதில்லை
இன்னும் எனக்குள் அவள்

என்னையே என்றும் ஏளனப்படுத்தி
எட்டிப்போன பொழுதுகள் எல்லாம்
எனக்குள் அவள்

பார்வையில் இருந்து மறைந்த பின்னும்
பாதி பொழுது நினைவுகளாலும்
மீதி பொழுது கனவுகளால்
எனக்குள் அவள்

காலம் கடந்து கண்டப் பிறகும்
கண்ணீர் துளியில் நீந்தும் நினைவாய்
எனக்குள் அவள்

எனக்கானவளாய் நான் நினைத்தவள்
நிற்கிறாள் வேறு துணையோடு
இப்பொழுதும், எனக்குள் அவள்

நான் பார்த்த பார்வையில்
இப்பொழுது வேறு காட்சி

நெற்றிச்சுட்டி இருந்த இடத்தில்
குங்கும பொட்டு
இருந்தாலும், எனக்குள் அவள்

என்னை நேராக பார்த்த பார்வை
இப்போது குழைந்துதான் பார்க்கிறது
என்னோடு பேசிய வார்த்தைகள் எல்லாம்
தடுமாறி நிற்கிறது

வா என்ற சொல்லோடு வாயடைத்து போகிறாள்

எனக்கென்று இல்லாத போதும்
அவள் எனக்குள் வாழ்கிறாள்

பார்த்த சந்தோசம்
பறிகொடுத்த வேதனை
இரண்டுக்கும் இடையில், எனக்குள் அவள்

துன்புற்று போவதற்கு
துளிகூட விருப்பம் இல்லை
தூங்கிய பொழுதுக்கூட
பின் தொடரும் அவள் நினைவு

தூரத்தில் இருந்து இனி
துரத்தும் வலிகளுக்கெல்லாம்
என்னுடைய பதில் தான் எனக்குள் அவள்...

எழுதியவர் : பா விஷ்ணு (26-Dec-17, 7:58 pm)
சேர்த்தது : பா விஷ்ணு
Tanglish : enakkul aval
பார்வை : 1398

மேலே