மனதிற்குள் மழைச்சாரல்
சடசடவெனச் சத்தம்
மழைதானென நினைத்தால்
குடை பிடித்தபடி வந்து கொண்டிருந்தது ஒரு மழை..
படபடவெனச் சத்தம்
காற்றுதானென நினைத்தால்
கதை பேசியபடி சென்று கொண்டிருந்தது ஒரு தென்றல்..
தடதடவெனச் சத்தம்
இடிதானென நினைத்தால்
தன்னை மறந்து குதித்துக் கொண்டிருந்தது ஒரு மான்...
கடகடவெனச் சத்தம்
புயல்தானென நினைத்தால்
எனை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தது ஒரு காதல்...
காதல் கனிந்த வேளையில்
தினம் தினம் நிற்காமல் பெய்ததது
மனதிற்குள் மழை
மழை நீர் துவட்டத் துவட்ட
திகட்டாமல் நனைத்துக் கொண்டிருந்தது
காதல்
இருமனங்களின் மழையால்
திருமணம் எனும் வானவில்
பூத்தது
விட்டுக்கொடுக்கும் வாழ்வில்
தினம் தினம் சாரலும் தூறலும்
நனைத்துக் கொண்டுதானிருக்கிறது அன்பு மழை...