முடியாத கவிதை
வாலுவும் வாண்டுவும்
*************************
சகியை நாளை பார்க்கப் போகிறேன்.....
இதை நினைத்தால் இன்று உறக்கமே இல்லை...
உருண்டு புரண்டு படுக்கிறேன்
ஒரு பொட்டு தூக்கமும் இல்லை
ஆனால் இதுவும் சுகமாகத் தான் இருக்கிறது
நாளை இந்த வேளை
என் சகி அருகில் நான்
நினைத்தாலே மகிழ்ச்சியில் மூர்ச்சையாகிவிடுவேன் போல் உள்ளது...
நாளை இந்த தருணம்
என் சகியின் பட்டு விரலை பிடித்துக் கொண்டிருப்பேன்...
என் சகியை ஆரத்தழுவி
உச்சி முகர்ந்திருப்பேன்...
என் சகியை
என் நெஞ்சோடு தாங்கியிருப்பேன்...
இருவருக்கும் இடையில்
எந்த தூரமும் இருக்கவே இருக்காது...
என் சகியின் தோளில் கை போட்டு
அவள் கரம் பிடித்து
ஒரு சின்ன சாலை பயணம் சென்றிருப்போம்...
என் சகியினை மடியில்
தாங்கி
அவள் முடி எனும் மயிலிறகை
வருடி கொண்டிருப்பேன்...
அவளின் ஆனந்த கண்ணீரை துடைத்துக் கொண்டிருப்பேன்...
அவளை தட்டிக் கொடுத்து கொண்டிருப்பேன்...
என் சகியை அள்ளி எடுத்து
ஆரத் தழுவி
தடவி கொடுத்துக் கொண்டிருப்பேன்.
என் சகியின் மடியில்
உலகை மறந்து
யாவும் மறந்து
அவள் கை பிடித்தே
உறங்கியிருப்பேன்...
ஐய்யோ ஐய்யோ
நேரம் கூட
சீக்கிரம் போக மாட்டேங்குதே...
கடிகாரம் ஓடவில்லையோ.?!?!???
நாளையை நினைத்தால்
இப்பொழுதே
மூச்சு முட்டி
செத்துடுவன் போலருக்கே
மகிழ்ச்சியில.....
அப்பாடா
ஒரு வழியா விடிஞ்சிடுச்சி...
தூங்கறது எல்லாம்
அங்க போய்ட்டு சகி மடியில தான்...
இன்னைக்காவது கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிடு பிரபா...
விமானத்தை பிடித்திட வேண்டும்.
எப்படி கிளம்பறன்றத மட்டும் பாரு....
ஏய்! மனசாட்சி பேசறத நிறுத்து...
எனக்கு நேரம் இல்ல...
நான் சீக்கிரம் கிளம்ப வேண்டும்....
ஏய் ! மனசாட்சி
எப்புடி.....
நாங்களும் கெளம்புவோமில்ல....
என்னைக்கும் இல்லாம
இன்னைக்கு எப்புடி
இவ்ளோ சீக்கிரம்.....???????
ஏன்னா
நான் என் சகிய பாக்கப் போறன்..........
சீக்கிரம் போ
இங்க சீன போட்டுட்டு
அங்க Flight அ விட்றாத...
நான் மட்டும் Flight அ தவற
விட்டன்.
நீ செத்த டி.....
எல்லாத்தையும் எடுத்து வச்சிகிட்டியானு பாரு....
இப்ப தான்
உருப்படியா ஒரு காரியத்த சொன்ன.
மிக்க நன்றி....
எல்லாம் சரியா இருக்கு
நான் போய்ட்டு
இலங்கைல இறங்குற வரைக்கும்
இப்படியே அமைதியா வரணும்
நடுவுல வாய தொறந்த
வாய்லயே ரெண்டு போடுவன்.
Sir Airport போகணும்.
எனக்கு இன்னும்
ஒரு மணி நேரத்துல Flight டு .
ம்ம்ம்.போகலாம்மா...
இன்னும் கால் மணி நேரத்துல போயிடலாம்மா...
இந்த நேரத்துல ஏது டிராஃபிக் ஜாம்.
ரொம்ப வேகமாவே கொண்டு வந்து விட்டீங்க.
மிக்க நன்றி ஐயா....
ம்ம்ம்.
போய் வாங்கம்மா....
சரிங்க ஐயா....
அப்பாடா...
எல்லா Pass உம் எடுத்தாச்சு....
இன்னும் அரை மணிநேரத்ல
பிரபா இலங்கைக்கு பறந்து போவன்....
போயி என் சகிய ஓடி போய் கட்டி பிடிச்சிப்பன்.
ஏ......
நான் சகிய பாக்கப் போறன்
சகிய பாக்கப் போறன்.....
அட எருமை
இது Airport டு...
ஆமாம் இல்ல...
ஆமாம். நான் உன்ன பேசக் கூடாதுன்னு தானே சொன்னன்...
நான் இந்நேரம் வாய தொறக்கலனா???
நீ எழுந்து ஆடியிருப்ப....
ஏ.....
கூப்டுட்டாங்க....
கூப்டுட்டாங்க....
அங்க என்ன
சுண்டல் தர்றாங்களா?????
பொறுமையா தான் போயேன் டி....
இப்ப நீ தான் சின்ன புள்ள மாதிரி நடந்துக்கற....
Happy Journey....
Thank You......
அதோ இருக்கு பாரு
நம்ம சீட்டு...
இல்ல என் சீட்டு
ஜன்னல் சீட்டு
ஆமாம்
இது அப்படியே
ஆண்டி பட்டி
புளியம் பட்டி
டவுன் பஸ்ஸூ
ஜன்னல் சீட்டுனு சொல்றா...
விட்டா துண்ட போட்டு இடம் பிடிப்பா போலருக்கே....
ஹலோ நம்ம சீட்டு
நமக்கு தான்
யாரும் வந்து உக்கார மாட்டாங்க...
ஹி ஹி ஹி....
இங்க பாரு மேல இருந்து கீழ பாத்தா
எல்லாம் குட்டி குட்டியா தெரியுது....
பெரிய கண்டுபிடிப்பு....
ஹி ஹி ஹி....
எவ்ளோ அழகா இருக்கு வானம்....
ஹலோ .....
எக்ஸ் க்யூஸ் மீ....
ஹலோ...
ம்ம்..சொல்லுங்க மா...
இலங்கையில
நீங்க எந்த இடத்துக்கு போறீங்க...?????
ரொம்ப bore அடிக்குது...
அதான் எதுனா பேசிட்டே வருவோமே....!!!
சரி...
நான் இலங்கையில
யாழ்பாணத்துக்கு போறன்...
நீங்க?
நானும் யாழ்பாணத்துக்கு தான் போறன்.
யாழ்பாணத்துக்கு எதுக்கு போறீங்க?????
நான் என் தேவதைய
பாக்கப் போறன்.
என் சகிய பாக்கப் போறன்...
சகி என் தங்கச்சி...
அவள தான் பாக்கப்போறன்...
எத்தனாவது தடவ
இலங்கைக்கு போறீங்க?????
இது தான் முதல் தடவ...
உங்க தங்கச்சி இருக்கானு சொல்றீங்க...
இது தான் முதல் தடவைனு சொல்றீங்க?
கூடப் பிறந்தா தான் தங்கச்சியா!!!!!
சரி...
உங்க தங்கச்சி
இலங்கை( சிலோன்) தமிழ்ல பேசுவா...
நீங்க இங்கிட்டு தமிழ்ல பேசுவீங்க...
எப்படி இரண்டு பேரும் புரிஞ்சிப்பீங்க??
இரண்டுமே தமிழ் தானே.....
முதல்ல இரண்டு மனசு (மனங்கள்) கதைத்துக் கொள்வதற்கு மொழி எதற்கு ?
என் மனசுல நெனைக்கறத
அவ புரிஞ்சிப்பா...
அவ மனசுல நெனைக்கறத நான் புரிஞ்சிப்பன்...
அவளுக்கு எதுனா புரியலன்னா
நான் புரிய வைப்பன்....
எனக்கு எதுனா புரியலைன்னா
அவள் புரிய வைப்பாள்...
அவள பாத்து இருக்கிங்களா...
எப்படி இருப்பா என்றாவது தெரியுமா...
எப்படி இலங்கையில் இருந்து யாழ்பாணம் போவீர்கள்...
இது தான் முதல் முறை என்று சொல்கிறீர்கள்
தனியாக வந்திருக்கிறீர் துணை இல்லாமல்?????
ம்ம்ம்.
பாத்துருக்கன்.
என் மனசால பாத்துருக்கன்.
மிகவும் அழகானவள்...
அழகிய மனம் படைத்தவள்...
வெள்ளை மனசுக்காரி...
செல்ல சண்டைக்காரி...
சின்ன சிரிப்புக்காரி...
பெண்மையை தன் உயிராக
சுவாசிப்பவள்...
தமிழை தன் உயிராக நினைப்பவள்...
என் வீர தமிழச்சி....
இல்லாதவருக்கு இரங்கிடுவாள்...
கண்ணீரால் பல கவிதைகளையும்
காவியங்களையும் வடித்தவள்...
மொழி பேசும்
அன்பின் மொழி பேசும் அவள் விழி...
உதவிக்கு ஓடி வந்து நிற்பாள்...
கண்ணீரை துடைத்திடுவாள் தாயவள்
தன் கண்ணீரையும் வலியையும்
சிரிப்பாலே மறைத்திடுவாள்...
என் யாழ் மண் பெற்றெடுத்த
பசும் பொன் அவள்.....
மிகவும் நல்லவள்....
யாரையும் காயப்படுத்தாதவள் சமுதாயத்தின் வடுக்களை சுமந்து
வலியில் துடிப்பவள்...
உலகத்தில் மனிதம் பிறக்க
வழி செய்பவள்....
என் சகி....
என் தங்கை...
அவளே
என் தாய்....
அவளை காண தான் செல்கிறேன்....
எனக்காகவே
நான் வருவேன் என்று
வழியையே பார்த்து காத்துக் கொண்டிருப்பாள்
என் சகி....
நான் சீக்கிரம் போயாக வேண்டும்.....
என் சகியிருக்கயில்
எனக்கு வேறு துணை எதற்கு...
எனக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால்
அவளால் தாங்கிக் கொள்ள முடியாது....
எனக்கோ அவள் மடியில்
என் உயிர் நின்றாலும்
சந்தோசமே....
அவளை பற்றி சொல்ல வார்த்தை இல்லை
எம்மொழியிலும் ......
அவள் என் அழகிய தேவதை...
அன்பான கோபம் கொண்டவள்...
பண்பானவள்....
மொத்தத்தில் அவள் என் உயிர்...
என் சகி......
உங்களோடு பேசியது
மிக்க மகிழ்ச்சி மா...
நீங்கள் விரைவாக
கவனமாக சென்று வாருங்கள்...
உங்கள் சகியோடு
உலகை நன்றாக மகிழ்ச்சியாக
சுத்துங்கள்...
தங்களோடு பேசியது
எனக்கும் மிக்க மகிழ்ச்சி....
மிகவும் சந்தோசத்தில் இருக்கிறேன்.
இன்னும் சற்று நேரத்தில் என் சகியை பார்த்து விடுவேன்....
சொல்ல வார்த்தையே இல்லை என்னிடம்...
நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்
இதயத்தில் இணைகிறது....
நீங்களும் கவனமாக போய் வாருங்கள் அம்மா...
போய் வருகிறேன் மா....
சரி மா....
எவ்வளவு அழகாக இருக்கிறது இலங்கை...
பார்க்க இரண்டு கண்கள் போதாது...
இரசித்துக் கொண்டே இருக்கலாம்
ஆயுளுக்கும்...
அவ்வளவு இயற்கை வளம்
செழிந்த எம் மண்......
அதோ என் சகி......
பார்த்து விட்டேன்...
அவளை நான் பார்த்து விட்டேன்.
அவள் எனை இன்னும் பார்க்கவில்லை...
எவ்வளவு.....அழகாக இருக்கிறாள்....
அவளை வர்ணிக்க என் ஆயுளும் போதாது...
எழில் முகம்
நிலவு மேனி
அங்கமா அது தங்கமா...
கன்னமா அது மதுக் கிண்ணமா
பார்த்தாலே போதை ஏத்துதே
ஒரு பெண் நானே இப்படி வர்ணிக்கிறேன் என்றால்
ஒரு ஆண் பார்த்தால் நிச்சயம் அவள் அழகில் மயங்கி விழுந்திடுவான்.
மொழி பாடும்
அவள் பேச்சில்
விழி பேசும்
மௌனமாய்....
விழி நோக்கும்
பெண்ணிய அடையாளத்தை...
அழகான முத்து போன்ற பற்கள்
அதில் சிந்துகிறது தேன் போல் அவள் புன்னகை...
பொன்னகை தோற்கும்
அவள் புன்னகையில்....
அவள் முக அழகை விட
அகம் ஆயிரம் மடங்கு
அழகோ அழகு...
வெள்ளை உள்ளம்...
வெள்ளந்தி சிரிப்பு....
வெகுளித் தனம்....
ஓரிடத்தில்
அது என் தங்கை இடத்தில்...
நிறைய திறமைகள் இருந்தும்
அவள் எப்பொழுதும் அடக்கத்தின் பிறப்பிடமாகவே இருக்கிறாள்...
மண்ணுக்கு போகின்ற
உடல் மேல் எனக்கு
என்றும் விழி செல்லாது...
பிறரை காணும் பொழுது
அவர்களது முகத்தை பார்த்தே பேசுபவள் நான்...
ஆனால் என் தேவதையை பற்றி நீங்கள் அறிய வேண்டுமல்லவா
அதான்
அவள் அழகை பற்றி சிறு துளியை சிந்தியுள்ளேன்...
நான் சொல்லியது
கொஞ்சம் தான்...
என் சகி மீது
கண்ணடி பட்டுவிடுமே
மொத்தத்தையும் சொன்னால்.....
எனக்கு எப்பொழுதும்
அவளையும் அவள் அன்பையும் எண்ணத்தையும் தான் மிகப் பிடிக்கும்...
அவள் உயிரை என் இதயத்தில் பாதுகாத்து வைத்திருக்கிறேன்...
அவள் முதுமையிலும் அழகாகத் தான் இருப்பாள் எனக்கு...
உலகம் தான் அழகு என்ற சொல்லை தவறாக புரிந்து வைத்துள்ளது...
அழகு என்பது அகம்...
அவள் அகம் தான்
இந்த பிரபஞ்சத்திலேயே அழகானது....
அவள் உனை பார்த்ததும்
பயந்து மயங்கி விழாமல் இருந்தால் சரி...
என்ன வாய் நீளுகிறது???
ஒன்றும் இல்லையே....
நான் தமிழச்சி...
பின் இப்படி இல்லாமல்
உனை போல் வெள்ளையாகவா இருக்க முடியும்.....
ஆமாம்.
உன்ன நான் வாய திறக்க கூடாதுனு தானே சொன்னன்.???
அது தமிழ்நாட்ல
இது இலங்கை....
உனக்கு இந்த
மானம், சூடு, சொரணை
இதெல்லாம் கொஞ்சம் கூட இல்லயா???
அதான் உங்கூட இருக்கனே!
இதெல்லாம் எங்கிட்ட எப்பிடி இருக்கும்???!!!
அது சரி....
தொன தொனன்னு
என்ன மாதிரியே பேசிகிட்டே
வராத.
பாக்கறவங்க நம்மள லூசுனு நெனைக்க போறாங்க....
அப்பாடா....
இப்ப யாவது உண்மைய
ஒத்துக் கிட்டாளே
மகராசி....
அப்ப நான் என்ன லூசா????
ச்சேச்சே நான் அப்படி சொல்லவே இல்லயே...
நீயே ஒத்துக்கிட்டா
நான் எப்புடி பொறுப்பாவன்...
தொன தொனன்னு
பேசுவன்னு சொன்னியே
அதுக்கு சொன்னன்....
தொப்பி தொப்பி.....
அட ராமா
அட ராமா
எனக்கு ஏன்டா
இப்படி ஒரு மனசாட்சிய
கொடுத்த?????
எந்நேரமும் லொட லொடனு பேசறாளே....
இவர் பெரிய அப்பா டக்கரு....
உனக்கு நானே ஜாஸ்தி....
நீ மட்டும் என்ன
ஒழுங்கா....
வாய தொறந்தா
FM ரேடியோ மாதிரி
பேசிகிட்டே இருக்க...
என் காதுல இருந்து ரத்தமே வந்துடுச்சி பாரு.....
சகியும் நானும் தான்
இதுக்கப்புறம்
நீ போய் வேடிக்கை பாரு செல்லம்.....
சகி.........
ஓடி போய் கட்டி பிடிச்சிகிட்டன்...
ஊரே பாக்குது பாத்தா
பாத்துட்டு போகட்டுமே...
இதுக்கு முன்னாடி
இப்படி யாரயும்
இத்தனை பேர் எதிர்ல கட்டி பிடிச்சதில்ல....
விழியோரத்தில் இருந்து நீர் துளி அரும்புகிறது...
இது ஆனந்தத்தின் வெளிப்பாடு.
வார்த்தை எதுவும் வரவில்லை.
இப்படியே இருந்துவிட வேண்டும் போல் உள்ளது.
அக்கா என்று எனை அழைக்கிறாள்.
அந்த வார்த்தையில்
என் உயிர் உருகியது.
அவளின் கதகதப்பில் கரைகிறேன்...
என் சகியின் மொழி கேட்டு
இரசிக்கிறேன்...
அவள் கதைப்பதே
பாடுவது போல் இருக்கிறது...
பாடினால் ....???
இன்னும் அருமையாக இருக்கும் அல்லவா....!!!
நான் மிகவும் கொடுத்து வைத்தவள்...
அவள் அருகில்
அவள் பாடுவதை கேட்டு எனை மறக்க இருக்கிறேன்....
அவளை ஆரத் தழுவி
உச்சி முகர்கிறேன்...
என் சகி எனை
வழி நடத்த
அவள் கரம் பற்றி நடக்கிறேன்...
பாதை நீண்டு கொண்டே இருக்க வேண்டும் என்றே
மனம் சொல்லிக் கொண்டிருக்கிறது...
அவளின்
பட்டு போன்ற
பிஞ்சு விரலை
இறுக்கமாக பிடித்திருக்கிறேன்...
அவளுக்கு வலிக்கக் கூடாது.
சகி ....
நலம் தானே....
வீட்டில் எல்லோரும் சுகமா...
வார்த்தை எல்லாம்
நெஞ்சுக்குழி வரைக்கும் வருது
அதுக்கு மேல வர மாட்டேங்குது.
சந்தோசத்துல பேச்சு வர மாட்டேங்குது.
பேச வரல
பேச வரலன்னு
வண்டி வண்டியா பேசறீயே டி...
நீயே தான் பேசற...
அவளயும் கொஞ்சம் பேச விடு...
மவளே நீ வந்துட்டியா...???
என் கையில கெடச்ச கைமா டி நீ.....
சகி ஊர சுத்தி பாக்கலாமா...
ம்ம்ம்.
போகலாம் அக்கா.....
நிறைய இடத்துக்கு போகலாம்.....
எனக்கு பிடிச்ச இடத்துக்கு எல்லாம் போகலாம்...
அது உங்களுக்கும் பிடிக்கும் அக்கா....
நான் உங்கள அழைச்சிட்டு போறன் அக்கா.....
சரி மா.....
கைக்கோர்த்து
இந்த சாலையில்
ஒரு குட்டி பயணம் போவோம் சகி....
ம்ம்ம். சரி அக்கா....
சகியும் நானும்
கைக் கோர்த்து சாலை பயணம்
நீளக் கூடாதா
என்று மனம் ஏங்குகிறது...
நிறைய பேசிக் கொண்டோம்...
சகி பாடி நீங்கள் கேட்டதில்லையே.....
காதில் தேனருவி பாயும்...
என்ன ஒரு குரல்....
மிகவும் இனிமையாக
பாடுவாள்....
அவளை பாடச் சொல்லி கேட்டு இரசிக்க போகிறேன்.
உலகை மறக்க போகிறேன்...
நீங்களும் என்னோடு கேளுங்கள்....
சகி....
சொல்லுங்க அக்கா....
பாடு சகி.....
அக்கா .
நீங்களே பிரயாணம் முடித்து
களைத்து போய் வந்துள்ளீர்....
நான் பாடி வேறு உங்களை சாகடிக்க வேண்டுமா?
சகி...
நீ பாடவில்லை என்றால் தான்
நான் தெம்பு இல்லாமல்
மயங்கி விழுந்துடுவேன்...
பின் நீ தான் தூக்கிக் கொண்டு போக வேண்டும்...
நீங்கள் மயங்கினால்
மடியில் நான் தாங்கிடுவேன் அக்கா...
ஆனால் என்னை பாட சொல்லி
உங்களை பயமுறுத்த சொல்லாதீர் அக்கா...
சகி எனக்காக பாட மாட்டியா?????
என்னை பாடாம விட மாட்டிங்க போல.....
ஆமாம்... ஆமாம்.....
எல்லோரும் அமைதியாக இருங்கள்.....
சகி பாடுகிறாள்......
அருமை.....அருமை.....அருமை..... அருமை.....அருமை.....
ஏ Super சகி.....
மிக்க நன்றி சகி......
அக்கா இங்கு தான் வாருங்கள்...
இது என்ன சகி மருத்துவமனை மாதிரி
உள்ளதே....
மாதிரி இல்லை அக்கா அதே தான்...
அங்கு தான் மருந்து மருந்தா தந்து சாகடிக்கிறார்கள்...
இங்குமா...??
ஹா...ஹா...அக்கா இங்கு உங்கள் கண்ணையும்,காதையும்
ஒரு தடவை காட்டி விடுவோம்....
வந்ததில் இருந்து உங்கள் புளுகு மழை தாங்கவில்லை...
அதான் வாருங்கள்....
உங்கள் பதில் என்ன அக்கா...??
வர வர உன் விளையாட்டிற்கு ஒரு
அளவே இல்லையா....
இது தான் நீ எனக்கு சுற்றி காட்டும்
இலட்சணமா....??
ஹா...ஹா...ம்ம்..ஆமாம்...
உன்னை....எங்கு ஓடுகிறாய்
என் கையில் மாட்டினால் நீ
அவ்வளவு தான்...
எங்கே என்னை பிடியுங்கள்
பார்க்கலாம்...
ஓ..மை கடவுளே...
என்னை நீ ஒருத்தி படுத்திற பாடு
போதாதா...??அவரை வேறு எதற்காக
தொந்தரவு செய்கிறாய்...??
ம்ம்..சுண்டல் வாங்கி தாருங்கள் என்று
கேட்கத்தான்...அட நீங்கள் வேறு
உங்களோடு ஓடி பிடித்து விளையாடியதில்
என் 2kg குறைந்து விட்டது...
இப்பொழுது எதற்கு வராத கண்ணீரை
துடைக்கிறாய்...??
ம்ம்..சும்மா ஒரு கவலையில் தான்..
சரி..சொல்லுங்கள் அடுத்து எந்த
மருத்துவமனைக்கு செல்வோம்...??
என்னது...??
அக்கா மெல்ல...மெல்ல..கண் சுளுக்கிக்க
போகிறது....நான் சும்மா..சும்மா..சொன்னேன்..
சரி..சொல்லு...அடுத்து நீ என்னை எங்கு அழைத்து
செல்ல போகிறாய்...??
ம்ம்...ம்ம்...ம்ம்...
இப்ப எதற்கு இல்லாத மூளையை போட்டு
கசக்கிகொண்டிருக்கிறாய்...??
என் மூளையை தான் வந்தவுடனேயே
நீங்கள் கடனாக வாங்கிவிட்டீர்களே...??
உங்கள வாய் கூடி தான் போச்சு....
எல்லாம் பழக்க தோஷம் தான் அக்கா..
ஹி...ஹி...ஹி...
உன் 32 பல்லையும் காட்டியது போதும்
அடுத்து எங்கு போகப்போகிறோம் என்று
சொல்லு...??
யாழ்ப்பாணத்தில் கோவில்கள் தான் அதிகம்..
உங்களுக்கே தெரியும் நான் எப்பேர்ப்பட்ட
பக்திப்பழம் என்று அதான் என்ன செய்வது
என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்....
ம்க்கும்...இது இன்னைக்கு வேலைக்கு ஆகப்போறேல
அடியே பிரபா இவளை நம்பி வந்தியே உன்னை
சொல்லணும்....
விட்டா இவள் இன்னைக்கு பூரா யோசிப்பாள் போல
இருக்கே...
ஏதாவது சொன்னீங்களா அக்கா...??
இது மட்டும் உன் காதில விழுந்துடாதே...
ஹி....ஹி...ஹி...
ஆ..ஊ..நா பல்லை மட்டும் காட்டிடுவாள்
மகராசி...
-----
கதை என்றால் முடிய வேண்டுமா
என்ன...
இது காலத்திற்கும் முடியாத கவிதை😜...