கடவுளாகக் காட்சி அளித்தாள்

என்னுடன் இருந்த என் அன்னை
இன்னும் எவ்வளவு தூரம் என்றாள்
இந்த சொகுசு குளிர்சாதன பெட்டியில்
என்னெதிரே இருந்த இளம் தம்பதி
போய் வருகிறோம் எனக்கூறி
பிரியா விடை பெற்றெழுந்தனர்.

அழகிய அப்பெண்ணின் பிரிவு
என்னை ஏன் வருத்த வேண்டும்.
இது எந்த ரயில் நிலையம்?
பெரிய ”சந்திப்பு” போலும் என்று
பார்த்திட எழுந்தவன் பார்வை
அவளுக்குப் பின்னே நிலைத்தது.
கதவைத் திறந்து தலையை நீட்டி
அவள் தாண்டிய மஞ்சள் பலகையில்
“தாணே” என்ற பெயரைக் கண்டு
தானாக மேனியில் நடுக்கம் எடுத்தது.

ஏலாக்குறிச்சி மாதா கோயில்
வீரமாமுனிவர் பாடிய கோயில்
போலாம் என்றழைத்த மனைவி
என்னுடன் இல்லையே இங்கே.
தஞ்சாவூர் செல்ல வேண்டியவன்
இப்படி தாணேக்கு வந்ததெப்படி
அதுவும் பத்து ஆண்டுகளுக்கு முன்
செத்துப்போன என் அம்மாவுடன்

இரயில் கிளம்ப மணி அடித்தது.
ஒருவேளை எனக்கான சாவு மணியோ!
கனத்த இதயத்துடன் கண் திறக்க
காப்பி சகிதம் நின்றிருந்த மனைவி
கடவுளாகக் காட்சி அளித்தாள்!.

எழுதியவர் : தா .ஜோ . ஜூலியஸ் (10-Oct-18, 3:37 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 55

மேலே