தோனி ராஞ்சின் ராஜா ஆன கதை - 4

தாதா - இந்த பெயரை தவிர்த்து யாரும் இந்திய கிரிக்கெட் அணியை பற்றி பேச முடியாது. இப்போ எப்படி கோலியோ, அந்த காலக்கட்டத்துல கங்குலிதான். இந்திய கிரிக்கெட் அணிங்கிற சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்ட ஒருத்தன், தன்னோட இருப்பை தக்க வச்சிக்க செய்த போராட்டத்தை அவ்வளவு எளிதா கடந்து விட முடியாது. கங்குலின்னு சொன்னதும் எனக்கு 2003ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டமும், நாட்வெஸ்ட் இறுதி போட்டியும், ஆஸ்திரேலியா தொடரும்தான் ஞாபத்துக்கு வருது. எந்த முடிவு சரியாய் இருக்கும்ன்னு நினைச்சாரோ, இவர்தான் இந்திய பயிற்சியாளராய் வேணும்னு நினைச்சாரோ அதே சேப்பல்லாலதான் அவருடைய சரிவும் தொடங்குச்சு.
கடைசியா ஜிம்பாவே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்ல கேப்டன் ஆக இருக்காரு. அடுத்த மாதமே இலங்கை தொடருக்கு கேப்டன் டிராவிட் வராரு. அந்த தொடர்ல தான் மறுபடியும் தோனி தன்னுடைய இருப்பை மீண்டும் நிலைநிறுத்திக்குறான். ஆட்டம் இழக்காமல் அவன் அடிச்ச 183 ரன்கள் தான் இன்னவரை ஒரு விக்கெட் கீப்பரின் அதிகபட்ச ரன்கள். அந்த தொடர்ல இருந்து கங்குலி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வராரு. அதை தொடர்ந்து வர தொடர்கள் எல்லாத்துலயும் டிராவிட் தான் கேப்டன். இடைப்பட்ட காலத்துல கங்குலிக்கு வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்படுது. இதற்கு முழுக்க காரணம் சேப்பலும் அப்போ இருந்த இந்திய கிரிக்கெட் வாரியம் மட்டுமே.
பல மாத இடைவெளிக்கு பிறகு மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரா தான் கங்குலிக்கு வாய்ப்பு கிடைக்குது. அந்த மேட்ச் டென் ஸ்போர்ட்ஸ்ல ஒளிப்பரப்பு செய்யப்படுது. அந்த சேனல் மட்டும் எடுக்கலை. இணைய வசதியோ, போன் வசதியோ இல்லை. கம்ப்யூட்டர் உபயோகமும் இல்லை. திருச்சியில் இருக்குறவங்களுக்கு மாஸ்மீடியா பத்தி தெரியமா இருக்காது. அந்த மேட்ச் முடியுற வரை, அங்கேயே ஸ்கோர் செக் பண்ணிட்டு இருந்தேன். இதை இப்போ சொல்றதுக்கு காரணம் இருக்கு. நிறைய பேரு இப்போ தாதா-ன்னு சொல்லிட்டு திரியலாம். யாரோ ஒருத்தருக்கு விசுவாசம் காட்டுறதுக்கு, இன்னொருத்தரை மட்டம் தட்டிட்டு இருக்கானுவோ. புள்ளிவிவரம் பேசுனா மூடிட்டு இருப்பானுங்க என்பது தனிக்கதை. மறுபடி, மறுபடி சொல்றேன். கங்குலி-தோனி ஒப்பீடே தவறு. ரெண்டு பெரும் வெவ்வேறு காலக்கட்டம்.

அந்த மேட்ச்ல அவரு 98 ரன் எடுத்து அவுட்டு ஆகுறாரு. அன்னைக்கு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மறுபடி கெத்தா வராரு. ஒருநாள் போட்டியிலயும் அவரோட பங்களிப்பு தொடருது. T20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்பு. ஒருநாள் போட்டியின் கேப்டன்ஷிப்பும் தோனி கைக்கு வருது. அதை பத்தி தனியா எழுதுவோம். இந்திய கிரிக்கெட் அணி சர்வ வல்லமை பொருந்திய ஒரு தனியார் அமைப்பு. வீரர்களின் பங்களிப்புலாம் கொஞ்ச காலத்துக்கு தான். காலத்துக்கு ஏற்ப துச்சமா தூக்கிதான் போடுவாங்க. அன்னைக்கு கங்குலிக்கு ஏற்பட்ட நிலைமை, இன்னைக்கு தோனிக்கு நடக்கும். நாளைக்கு விராட் கோலிக்கும் நடக்கும். இதுதான் கள நிலவரம்.

அதை விட்டுட்டு திரும்பவும் ஒருத்தனை மட்டம் தட்டிட்டு இன்னொருத்தனை தூக்கி வச்சா. அது பெருமை ஆகாது. கங்குலி கட்டமைச்ச அணியை வச்சுதான் தோனி உலகக்கோப்பை வாங்குனாரு என்பதே வீண்வாதம். அப்படி சொல்லும்போதே மறைமுகமா அவரோட திறமை மீதுதான் கேள்வி எழும்.

இந்த பதிவுல ஒரு விஷயம் சொல்லியே தான் ஆகணும். கங்குலி தன்னோட ஓய்வை அறிவிச்சிட்டு கடைசி டெஸ்ட் போட்டியில விளையாடுறாரு. இந்திய அணியை கட்டி ஆண்ட ஒருத்தன், ஒரு சாதாரண வீரரா வெளியேறுற நிலைமை. இந்திய கிரிக்கெட் வாரியமும் கங்குலியை சிறப்பான முறையில் கவுரவிக்கவில்லை. ஆனா தோனி தன்னோட கேப்டனுக்கு, அவரோட கடைசி போட்டியில தன்னோட பதவியை கொடுத்து கேப்டனா அழகுபடுத்திப் பார்த்தான். விசுவாசத்திற்க்கான நேரடி உதாரணம் பார்த்தப்ப அங்க தோனி இன்னொரு கங்குலியா உருவாகிட்டு இருந்தான்.

எழுதியவர் : Sherish பிரபு (17-Jul-19, 8:26 pm)
சேர்த்தது : Sherish பிரபு
பார்வை : 50

சிறந்த கட்டுரைகள்

மேலே