அவளின் குறிக்கோள் 👑

அவளின் குறிக்கோள் .

அவன்:- உன்னுடைய பதில்.
அவள்:- ..........
அவன்:- பிடிக்கவில்லையா!
அவள்:- ........
அவன்:- மெளனம் சம்மதம் என்று....
அவள்:- வாழ்க்கை என்ற பேருந்தில் படிக்கட்டில் தொங்கி கொண்டு செல்லும் பயணி நான். இதில் காதல் என்ற எண்ணம் எப்படி வரும்.
அவன்:- அப்போது.... நீ.... நீங்கள்....
அவள்:- ஆம்! தினம் தரையில் படுதுறங்கி, பல நாட்கள் பட்டினியை என் வயிற்றுக்கு விருந்து அளித்து, குடிசையில் இருந்து கல்லூரி வரும் ஏழை பெண் நான்.
அவன்:- அதனால் என்ன?
அவள்:- கல்வி என்னை காதலித்ததால், கல்லூரி வரை வந்துள்ளேன். கல்லுடைத்து தன் வியர்வையை ரத்தமாக சிந்தி இது வரை என்னை ஆளாக்கிய என் தாய்,தந்தையரின் கனவு நான் ஆட்சியர் ஆக வேண்டும் என்பது. முதலில் நான் அது காணல் நீர் என்று நினைத்தேன். இப்போது அது சாத்தியம் தான் என்று என்னுடைய ஆழ் மனது சொல்கிறது.
அவன்:- லட்சியம் உள்ளவர்கள் காதல் செய்ய கூடாதா?
அவள்:- நான் புதையலை நோக்கி பயணிக்கும் வீராங்கனை. என் லட்சியத்தை தவமாக தியானிப்பவள். சராசரி பெண்ணுக்கு ஏற்படும் ஆசைகளை என்றோ குழிதோண்டி புதைத்து விட்ட ஞானி . என் கண்கள் மூடினாலும், என் கண்கள் திறந்தாலும் என் கண்ணெதிரே தெரிவது என் லட்சியம் தான். அது ஆட்சியர் என்ற உயர் பதவி தான். இது என் தற்புகழ்ச்சி இல்லை. தம்பட்டம் இல்லை. என் உண்மை நிலை.
அவன்:- உன் லட்சியம் நிச்சயம் நிறைவேறும்.
ஒரு சின்ன விண்ணப்பம். உன் லட்சியம் நிறைவேறும் வரை நான் உனக்காக காத்திருக்கலாமா? இது குறித்து உன் பதில் என்ன?
அவள்:- என் பாதையை , நான் பயணிக்க போகும் பாதையை விளக்கிவிட்டேன். என்னை பொருத்தவரை
நீங்கள் உங்கள் பாதையில் பயணிப்பது மிகவும் சாலசிறந்து.
அவன்:- தெரிந்தோ ,
தெரியாமலோ உங்களை என் மனம் காதலித்துவிட்டது. அதில் இருந்து நான் என்னை விடுவித்து கொள்ள சில காலம் ஆகும். மீண்டும் ஒரு முறை உங்கள் குறிக்கோள் நிறைவு அடைய என் வாழ்த்துக்கள். இனி என் பாதை வேறு . என் பயணம் வேறு. நிச்சயம் குறிக்கிடமாட்டேன்.
அவள்:- நன்றி. இளமை ஒரு பூந்தோட்டம் தான். இனிமையான சங்கீதம் தான். இல்லை என்று நான் கூறவில்லை. இருந்தாலும் என்னை மாதிரி பாலைவனத்தில் நந்தவனம் அமைக்க நினைப்பவர்களுக்கு இளமை ஒரு பருவமே, தவிர இன்பம் இல்லை. தோழரே, நான் அந்த ஆண்டவனுக்கு நன்றி சொல்வேன். ஏன் தெரியுமா, என்னை ஏழையாக படைத்தற்கு. இல்லையென்றால் இந்த லட்சியம், கனவு ,குறிக்கோள் இல்லாமல் போயிருக்கும். தன்னம்பிக்கையை என்னுள் இமயம் உயரத்திற்கு உரம் போட்டு வளர்த்துள்ளேன். இப்போது பிரிவோம், மீண்டும் நீங்கள் ஒரு வேளை என்னை சந்திக்க நேர்ந்தால் அன்று நான் ஆட்சியராக ஆகியிருப்பேன். அது உறுதி.
தோழரே, உங்கள் வாழ்க்கை பயணம் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்.
- பாலு.

எழுதியவர் : பாலு (17-Nov-19, 4:36 pm)
சேர்த்தது : balu
பார்வை : 1001

மேலே