திருவொக்குந் தீதில் ஒழுக்கம் – நான்மணிக்கடிகை 6

இன்னிசை வெண்பா

திருவொக்குந் தீதில் ஒழுக்கம் பெரிய
அறனொக்கும் ஆற்றின் ஒழுகல் பிறனைக்
கொலையொக்குங் கொண்டுகண் மாறல் புலையொக்கும்
போற்றாதார் முன்னர்ச் செலவு. 6

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

தீமை கலவாத நல்லொழுக்கம் செல்வத்தை ஒக்கும்;
முறைப்படி ஒழுகுதல் சிறந்த அறச் செய்கையோடு ஒக்கும்;

பிறனொருவனை நட்பாகக் கொண்டு பின்பு அந்நட்பு மாறிப் புறங் கூறுதல் அவனைக் கொலை செய்தலைப் போன்றதாகும்;

தம்மை மதியாதாரிடத்தில் சென்று ஒன்றை நயத்தல் இழி தகைமையை ஒப்பதாகும்.

கருத்து:

நல்லொழுக்கம் செல்வம் போன்றது; முறையான இல்லற ஒழுக்கம் துறவறத்தைப் போன்றது; பிறரைப் புறங்கூறல் அவரைக் கொலை செய்தல் போல்வதாம்; தம்மை மதியாரைத் தாம் மதித்தல் இழிதகைமையாகும்.

விளக்கவுரை:

நல்லொழுக்கம் உடையார் செல்வரைப்போல் நன்மதிப்பும், வாழ்க்கையில் இடுக்கண் இன்மையும், உயர்வும் புகழுமான இம்மை நலங்களையும் பெற்றிடுதல் திண்ணமாதலின், ‘திருவொக்கும்,' என்றார்.

முறையான உலகவாழ்க்கை துறவற வாழ்க்கையை யொத்தலின், ‘பெரிய அறன் ஒக்கு' மெனப்பட்டது.

பெரிய அறன் - துறவறம். ஆற்றின் - இல்லற ஆறு:

"அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்" (திருக்குறள், இல்வாழ்க்கை. 6) என்பதுங் காண்க.

கண்மாறல்: ஒரு சொல்; கருத்து மாறலென்பது பொருள். புலை: தன்மையின் மேலது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Nov-19, 8:28 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 120

மேலே