நெஞ்சமில் கலந்தவருடன்

கண்ணே மணியே
என்றில்லாது...
எந்தன் கண்ணின் மணியாய் ஒன்றியவனே.....
உயிருள் உனை விதைத்ததன் விளைவா?
கண்ணோரம் சிதறிடும் கரிப்பு மணிகள்.....
ஆழமாய் ஊன்றி உயிருள் உறைந்தபின்
உயிரோடு வேரறுக்கிறாயே ....என்னை வெறுக்கிறாயே!
விலகியிருக்க நினைக்குமளவு நாம் நெருங்கவுமில்லை.....
கூடியிருக்க நினைக்காதிருக்குமளவு நாம் விலகவுமில்லையே.......
நித்தமுன் நினைவுகளில் தொலைகிறேன்.....
நிகழ்காலம் தவிர்த்து எங்கோ செல்கிறேன்.....
மௌனத்தால் கொல்லும் மௌனியே.....
மணிக்கணக்கில் நீ பேசிய பேச்சுகள்
மனச்சிறையில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கின்றனவே....
நள்ளிரவு குளிர்ப்பேச்சுகளும் நயவஞ்சகமாய்ச் சுடுகிறதே!
இக்காலத்து மாரிக்காலம் போன்றவனே!
அன்புமழை பொழிந்தால் மூழ்கடித்துவிடுகிறாய்........
அனல்மழையால் உயிர்க்குடித்துக் காய்த்துவிடுகிறாய்.......
ஆதவன் ஒளிக்கேங்கும் மலராய் ஏங்குகிறவள்.....
அவனின் வெம்மையால் வாடிவிடுகிறாளே!
குணக்குன்றே! என்னுயிர் செல்வமே!
என்காதல் ஒருதலைக்காதலாய்....
நீயறியுமளவு இடம்கொடுத்தமைக்கு நன்றி!
எரியும் என்னுயிர்க்கு தண்மையாய் வீசிய சொற்களுக்கு நன்றி!
உன்னோடு வாழ முடியாவிட்டாலும்
உன் நினைவோடேனும் வாழ நினைவளித்தமைக்கு நன்றி.....
என்னுள் நீங்காது நிறைந்தமைக்கு நன்றி!
என்னுயிர் இந்நாள் அளவும் நிலைத்திருக்க உதவியமைக்கு நன்றி......
மென்மனம் கொண்டாளை மனக்காயங்களோடு வாழ பழக்கியமைக்கு நன்றி!
ஏமாற்றம் ஏற்கப் பழக்கியமைக்கு நன்றி!
ஒவ்வொரு முறையும் உன் பதிலுக்கு காத்திருந்து காத்திருந்து
பொறுமையை வளர்த்தமைக்கு நன்றி!
நன்றி!நன்றி!நன்றி!

இனியும் நீ எனக்காக ஒன்று செய்ய வேண்டும்....
மறைந்துவிடு!கரைந்துவிடு!கலந்துவிடு!
என் நினைவிலிருக்கும் நினைவெல்லாம்
என்னுயிருள்ளே மறைந்துபோகட்டும்....
நான் சுவாசிக்கும் காற்றினிலே கரைந்து போகட்டும்.....
என்னுள்ளே என்னுயிருள்ளே கலந்துபோகட்டும்.....


யாருமறியா தேசத்திலே நான் தொலைந்து போகவேண்டும்....
தூரதூர நாடுகளுக்கு பறந்து போகவேண்டும்.....
இயற்கையழகால் மனக்காயங்களுக்கு மருந்திட வேண்டும்....
மழைக்காற்றால் சுட்டெரிக்கும் மனம் தணியவேண்டும்......
வறியார்க்கு ஈத்துவந்து இன்பம்கொளல் வேண்டும்.....
மழலையோடு மகிழ்ந்து வாழ்வை ரசிக்க வேண்டும்....
வாழ வேண்டும் என்முன் நீ இல்லாதிருந்தாலும்
என்னுளிருக்கும் உன்னோடு மகிழ்வாய் வாழ வேண்டும்....
நீயறியா வண்ணம் உன்னை தரிசிக்க வேண்டும்....
மறந்தும் உனை மறக்காதிருக்க வேண்டும்......
உயிரோடு கலந்த உன்னை எப்பொழுதும் உணர வேண்டும்......
கனவெல்லாம் கைகூட வேண்டும்.......
என்றும் அழியாக் காதலோடு......உனக்காக காத்திருக்கும் உன்னவள்....
என்றும் நெஞ்சமில் கலந்தவருடன்........

எழுதியவர் : கயல் (25-Jun-20, 3:15 pm)
சேர்த்தது : கயல்
பார்வை : 163

மேலே