நானும் அவளும்

என்னை நம்பி அவளை ஒப்படைத்து விட்டு
எங்கோ வெளியே சென்று விட்டாள்
அவள் அன்னை நானும் அவளுமோ
தனிமையில்

பக்கத்தில் பதுமை போல் அமர்ந்து கொண்டாள்
அப்படியே அள்ளிக்கொண்டேன்
மறுக்கவில்லை ஒட்டிக்கொண்டாள்
அந்த ஒரு நிமிடம் ஆஹா

அவள் சுவாசம் என் கழுத்தில் சுட
என்ன என்று கன்னத்தை தட்டிக்
கேட்டேன் கள்ளமின்றி சிரித்தாள்
மறுபடியும் அணைத்துக் கொண்டேன்

சிரிக்கிறாள் கோடி ரோஜாக்களை
கொட்டியது போல் ஒரு மலர்ச்சி
சும்மா சொல்லக் கூடாது அழகி
அவளோ எனக்கு பேரழகி

கலைந்த தலை முடியை என்
கைகளால் கோதி விட்டேன் என்
கன்னத்தை தன் பட்டு கைகளால்
தொட்டு தடவி விட்டாள்

ஒரு முத்தம் தா என்றேன்
மறுப்பேதும் இன்றி நச் என்று
ஒடிந்த என் கன்னத்தில் இறுக்கி
ஒரு முத்தமிடடாள் என்ன சுகம்

இருவரும் தனித்திருக்க அன்னையவள்
குரல்என்னை நிலை தடுமாற வைத்தது
தாருங்கள் குழந்தையை என்றாள் மீண்டும்
முத்தமிட்டுக் கொடுத்தேன் அவளை

குற்றால அருவியிலே குளித்ததுண்டா
குழந்தையின் ஸ்பரிசமும் அப்படியே
அழகிய மழலையின் அரவணைப்பில்
அன்போடு நானிருப்பேன்

எழுதியவர் : Ranjeni K (6-Jul-20, 3:36 pm)
Tanglish : naanum avalum
பார்வை : 294

மேலே