கிரேஸி மோகன் நினைவஞ்சலி
வண்ணப் பாடல் ....!!! :103
*************************
தந்தனான தான தந்த
தந்தனான தான தந்த
தந்தனான தான தந்த தனதானா
நம்கிரேசி மோக னென்ற
அன்பனான மேதை யென்றும்
நஞ்சிலாது பேசு மின்ப மொழியோனே!
நண்பனோடு பாவ றிந்து
பொங்குமாவ லோடு ணர்ந்து
நன்றியோடு தானி ணைந்த குணசீலா!
தம்பியோடு மேடை கண்டு
பந்தபாசம் பேணி வந்து
தந்தைபோலும் பாச மென்றும் பொழிவோனே!
சந்தம்பாட ஞான முண்டு
நெஞ்சிலூறும் வேக முண்டு
தங்கமான பாசு ரங்க ளருள்வோனே!
எம்பிரானின் தோள ணைந்து
தந்தையார்சொல் வேத மென்றும்
எந்தநாளும் வாழ்வில் நம்பு மெளியோனை
இன்றுநாமும் ஊர டங்கி
வென்றுவாழும் வாழ்வி லன்பை
என்றுகாண வென்று சிந்தை விழையாதோ?
உம்பரோடு நாட கங்கள்
அங்குநீயும் போட வன்றும்
ஒண்டியாக வேப றந்த அழகோனே!
ஒன்றுகூடி யாம்வணங்க
உந்துமாவ லோடு வந்த
உன்றனீடி லாவி ளங்கு புகழ்வாழி!!
சியாமளா ராஜசேகர்