நண்பனுக்காக
நண்பனுக்காக
கமலா அக்கா பரபரப்பாய் இருப்பதாய் குமரனுக்கு பட்டது. ஆனால் எதுவும் கேட்கவில்லை, கொண்டு வந்த ரேசன் பொருட்களை கமலா அக்காவிடம் கொடுத்தான். எப்பொழுதும் டீ சாப்பிட்டு போ குமாரு என்று கேட்கும் கமலாக்கா சரி குமாரு என்று அவனிடம் சொன்னது அவனுக்கு நீ போகலாம் என்பதாக பட்ட்து. சட்டென்று மனதில் வந்தது கோபமா துக்கமா தெரியவில்லை. கூப்பிடா விட்டால் என்ன? இது நண்பன் சோமையனுக்காக நாம் செய்யும் கடமை. மனதை தேறுதல் படுத்திக்கொண்டான். கமலா அக்காவிடம் ரேசன் பொருட்களை கொடுத்து விட்டு சைக்கிளை எடுத்து திரும்பியவன் எதிரில் சோமயாவின் அப்பா தலையில் சோளக்கதிர் கட்டுடன் வந்து கொண்டிருந்தார். என்னலே ரேசன் சாமான் கொண்டியாந்தியா? உன் பிரண்டு நாளானக்கி வரப்போறான் தெரியுமாலே? எனக்கு தெரியாதே, இப்பா அக்காட்டதா சாமான் கொடுத்தன், அக்கா ஒண்ணும் சொல்ல்லியே, மெல்ல சொன்னவனுக்கு விடுலே மறைந்திருப்பா, உன் பிரண்ட பார்க்க வந்திருலே, நாளானக்கி. ம்..பார்ப்போம், விட்டேத்தியாய் பதில் சொல்லி சைக்கிளை திருப்பி கோபத்தை காட்ட வேகமாக சைக்கிளை மிதித்தான்.
அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தவர் திரும்பி “ஏ கமலா” இரைந்தார். இந்த அப்பனுக்கு வேற வேலையென்ன? எப்ப பார்த்தாலும் இரச்சல்தான், முணுமுணுத்தவாறு வெளியே வந்து எதுக்குப்பா இப்படி கூப்பாடு போடறே? அந்த பயகிட்டே அவன் பிரண்டு வர்றான்னு சொல்லலியா? க்கும்..இதை கேக்கறதுக்குத்தான் ஊருக்கே கூப்பிடற மாதிரி கூப்பிட்டயாக்கும், சலித்தவள், மறந்துட்டேன், சொன்னவளை உறுத்த பார்த்த தகப்பன் வேணாத்தா, அந்த பையந்தான் ஐஞ்சு வருசமா நம்ம குடும்பத்துக்கு உதவியா இருக்கான். இப்ப உன் தம்பி சீமையிலே இருந்து வர்றான்னு தெரிஞ்சவுடனே இந்த பய உனக்கு வேண்டாதவனா போயிட்டானோ?கேட்டவருக்கு இதா எதையாவது பேசிகிட்டிருக்காதே, முதல்ல ஆத்தா எங்கே? பேச்சை மாற்றினாள். அவ மாட்டை பத்திகிட்டு பின்னால வர்றா, என்றவர் சோளத்தட்டை கீழே போட்டு விட்டு வீட்டு திண்ணையில் உடம்பை சாய்த்தார்.
சைக்கிளை ஓட்டிக்கொண்டு இருந்த குமரப்பனுக்கு மனசெல்லாம் எரிந்தது. ஏன் இப்படி இருக்கிறார்கள்? இது நாள் வரை எனக்காக கையில் காப்பி வைத்து குமாரு என்று அன்பொழுக கூப்பிட்ட கமலாக்கா, தம்பி துபாயிலயிருந்து வருகிறான் என்றவுடன் அலட்சியமா நடந்துக்கறாங்க, சோமையன் போகும்போது சொன்ன வார்த்தைகள் இன்றும் மனசில் இருக்கிறது. குமாரு வயசான அப்பன், ஆத்தாளை விட்டுட்டு போறதுக்கு கூட இப்ப எனக்கு கஷ்டமா தெரிலை. வீட்டுல அக்கா ஒருத்தி இருக்கா, அவளுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கற வரைக்கும் அங்க மனசு இருக்காது. நீ எதுனாலும் எங்க வீட்டு வெளி வேலையெல்லாம் செஞ்சு கொடுத்துடா. சொன்னபடி இது வரை ரேசன் கடையிலிருந்து இவன் தோட்டத்திலிருந்தும் , அவர்கள் தோட்டத்திலிருந்தும் சந்தைக்கு எடுத்துச்சென்று வியாபாரிகளிடம் கொடுத்து ஒரு பைசா கூட தவறாமல் கொடுத்து வருகிறான். அவன் நினைத்திருந்தால் இவ்வளவுக்குத்தான் வியாபாரி கொடுத்தார் என்றூ சொன்னால் அவர்கள் நம்பி விடுவார்கள், ஆனால் அப்படியெல்லாம் செய்ய இவன் மனம் இடம் கொடுத்த்தில்லை.இடையில் குமரப்பனுக்கு கல்யாணம் ஆனது, அங்கிருந்து சோமையன் வாழ்த்து அனுப்பி கல்யாணம் ஆனதால் எங்கே தன் குடும்பத்தை மறந்து விடுவானோ என்ற பயத்தில் தன்னுடைய குடும்பத்துக்கும் ஏதாவது உதவிகள் செய்துட்டு இரு, என்று கடிதம் மூலம் கேட்டுக்கொண்டான்.
சோமையனும் குமரப்பனும் அந்த கிராமத்திலேயே ஆரம்ப பள்ளியிலிருந்து ஒன்றாக படித்தவர்கள். குமரப்பனுக்கு அவ்வளவாக படிப்பு ஏறவில்ல. சோமையன் தட்டு தடுமாறி பக்கத்து டவுனில் உள்ள மேல் நிலை பள்ளி வரை படித்து விட்டான். அந்த டவுனிலேயே ஒரு வேலை தேடிக்கொண்டாலும், அவன் குடும்பத்துக்கு என்று இருந்த தோட்டத்திலும் வேலை செய்தான். குமரப்பன் முழு தொழிலாக விவசாயத்தில் புகுந்து விட்டான். இப்படியே நான்கைந்து வருடங்கள் ஓட சோமையன் ஒரு ஏஜண்டை பிடித்து துபாய் போவதற்கான ஏற்பாடுகளை செய்து ஐந்து வருட விசாவில் கிளம்பி விட்டான். குமரப்பன் கூட கேட்டான், ஏண்டா அக்கா கல்யாணத்தை முடிச்சுட்டு போலாமில்லை?இல்லே குமாரு எங்க தோட்டம் அடகுலதான் இருக்கு. எங்க அக்காளுக்கு கல்யாணத்துக்கு குண்டுமணி நகை கூட கிடையாது. நான் போய்த்தான் ஏதாவது செய்து அக்கா கல்யாணத்துக்கு ஒரு வழி பண்ணனும், வேற வழி இல்லை என்று சொன்னான்.
முதல் வருடம் போய் இவனுக்கும் சில கடிதங்கள் போட்டவன் போகப் போக கடிதப்போக்குவரத்து குறைந்து விட்டது. அவர்கள் வீட்டுக்கும் வருடத்திற்கு நான்கைந்து கடிதங்கள் வரும். அதிலும் நான் நல்லா இருக்கேன், நீங்க எப்படீருக்கீங்க? என்று நான்கைந்து வரிகளில் முடித்து கொள்வான்.
வீட்டில் மனைவியிடம் ரேசன் பொருட்களை கொடுத்தவன் டீ போட்டு கொண்டா கேட்டவனை அதிசயமாய் பார்த்தாள் குமரப்பனின் மனைவி. என்னய்யா எப்ப கேட்டாலும் அக்கா அங்க டீ போட்டு கொடுத்துச்சு, அப்படீம்ப, இன்னைக்கு என்ன அதிசயமா இருக்கு அவளாக சொல்லிக்கொண்டு குசினிக்குள் நுழைந்தாள். மனைவி வருவதற்குள் அப்பனையும் ஆத்தாளையும் பார்த்து விடுவோம் என்று பக்கத்து குடிசைக்குள் நுழைந்தான். என்னடா குமாரு உன் பிரண்டு வரானமிலை, கேட்ட அப்பனை முறைத்து பார்த்தான் அவன் அப்பந்தான் எங்கிட்ட சொன்னான். எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது, எனக்கு மட்டும் தெரியவில்லை. சொல்லக்கூடாது என்று நினைப்பவர்களை என்ன செய்ய முடியும், நினைத்து கொண்டு நின்றவனை வெளியே டீ எடுத்து வந்து அழைக்கும் மனைவியின் குரல் கேட்டு வெளியே சென்றான்.
சோமையன் வந்து விட்டதாய் தகவல் அரசல் புரசலாய் காதில் விழுந்தது. இவன் கண்டு கொள்ளவில்லை. அவனாக தேடி வரட்டும், இனியும் வேலைக்காரனாய் அவர்கள் வீட்டுக்கு செல்ல மனம் வரவில்லை. தோட்டத்திலிருந்து வீடு திரும்பும் ஒரு சில நேரங்களில் சோமையன் கடைத்தெருவில் நண்பர்களுடன் உட்கார்ந்து அரட்டை அடித்து கொண்டிருப்பதை பார்ப்பான். ஆனால் இவனாக தேடி செல்லக்கூடாது என்று முடிவு செய்தவனாக அவர்களை பார்க்காதவாறு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்து விடுவான். ஒரு முறை குமரப்பனின் அப்பன் குமாரு உன் பிரண்டு உன்னை ரொம்ப கேட்டுட்டு இருந்தான், நாந்தான் உரம் வாங்கறதுக்கு டவுனுக்கு போயிருக்கான்னு சொன்னேன். நான் மறுபடி வாறேன்னு சொல்லிட்டு போனான். அப்பன் சொன்னதை காதில் வாங்காதது போல டவுனிலிருந்து வாங்கி வந்த உரங்களை ரகம் வாரியாக பிரித்து வைத்தான்.
ஒரு வாரம் ஓடியிருந்தது, விடியற்காலை, ரொம்ப நேரமாய் தூங்கி விட்டோமோ பதட்டத்துடன் அவசர அவசரமாய் எழுந்து பால் கறக்க குண்டாவுடன் கிளம்ப போனவன் “குமார்” என்ற குரல் கேட்ட்தும், வெளியே வந்தான். அங்கே தோள் பையுடன் சோமையன் நின்று கொண்டிருந்தான். “வா சோமையா” வாய் அனிச்சையாய் கூப்பிட்டாலும் மனம் அதனுடன் ஒன்று படாமல் இருந்த்து. சோமையன் செருப்பை கழட்டி வைத்து விட்டு தோள் பையுடன் உள்ளே வந்தான் சத்தம் கேட்டு வெளியே வந்த குமரப்பனின் மனைவி வாங்கண்ணே, என்றவள் இவன் கையில் இருந்த சொமபை வாங்கி நான் கறக்க போறேன், நீங்க பேசிகிட்டு இருங்க, சொல்லி விட்டு அண்னே சித்த உட்காருங்க, பால் கறந்துட்டு வந்துடறேன், இங்கிதமாய் சொல்லி விட்டு சென்றாள்.
இருக்கட்டும் என்று சொன்ன சோமையன் மெல்ல கீழே எடுக்காமல் இருந்த பாயிலேயே சாவதானமாய் உட்கார்ந்தான். குமரப்பனும் வேறு வழியில்லாமல் அந்த பாயிலேயே உட்கார வேண்டியதாயிற்று. இருவரும் ஐந்து நிமிடங்கள் ஒன்றும் பேசவில்லை. சோமையன் மெல்ல கணைத்து ரொம்ப நன்றி குமாரு, இந்த ஐஞ்சு வருசம் எங்க வீட்டை பாத்து கிட்டதுக்கு, சொன்னவனை ஒன்றும் பேசாமல் பார்த்தான் குமரப்பன். அவன் முகத்தை பார்த்த சோமயன் அக்கா அப்படி உன் கிட்ட நடந்து கிட்டதுக்கு நான் ரொம்ப மன்னிப்பு கேட்டுக்கறேன், என்று சொல்லவும் அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை அவசரமாய் மறுத்தான் குமரப்பன்.இல்லே குமாரு அப்பன் வந்த அன்னினிக்கே சொல்லுச்சு நாந்தான் உன்னைய அப்புறமா பார்த்து பேசிக்கறேன்னு சொல்லிட்டேன். சொல்லி விட்டு ஐந்து நிமிடங்கள் அமைதியாக இருந்தான்.
குமரப்பன் அவன் முகத்தையே பார்த்தவாறு இருந்தான். குமாரு நான் ஒண்ணு சொல்றேன், நீ யார் கிட்டேயும் சொல்ல மாட்டியே, பீடிகை போட்டான். குமரப்பன் மனம் இவன் பேச பேச மெல்ல கரைய ஆரம்பித்த்து. என்ன சோமையா என்னென்னவோ பேசறே, அவனை கை தொட்டு சமாதானப்படுத்தினான். இல்லே குமாரு உண்மைய சொல்லனும்ணா நான் துபாய் போகலை, என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தான் குமரப்பன். ஆமா குமாரு அந்த ஏஜண்ட் எங்களை ஏமாத்திட்டான். பாம்பே வரைக்கும் போன பின்னல்தான் தெரிஞ்சது, எல்லாமே டிராமா அப்படீன்னு. எங்களை ஹோட்டல்ல விட்டுட்டு அவன் எங்கோ போயிட்டான். குரல் கரகரக்க சொன்னவன எதுவும் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தான் குமரப்பன். அங்கேயே தங்கி எங்கெல்லாமோ அலைஞ்சி ஒரு வேலை தேடி அஞ்சு வருசம் ஊருக்கு வரக்கூடாதுன்னு ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். இந்த இரண்டு வருசத்துல ஒரு நல்ல வேலையில உட்கார்ந்திருக்கேன். ஊர்க்கெல்லாம் நான் துபாயிலயிருந்து வந்த்தாகவே இருக்கட்டும், உனக்கு மட்டும் உண்மைய சொல்லிடுவோம்னு இங்க வரும்போதே முடிவு பண்ணிட்டேன். அதனாலதான் உன்னைய உடனே பார்க்க வராம இருந்தேன்.
அக்கா வயசுல இருக்கறவங்க எல்லாம் பிள்ளை குட்டியோட இருக்கறதை பார்க்கறப்ப எனக்கு நெஞ்சு பதறுது, அக்கா எங்கிட்ட வாய் திறந்து எதுவும் சொல்ல்லையின்னாலும் எனக்கு புரியாதா? குமாரு அதான் அதுகிட்ட நான் எதுவும் சொல்லிக்கிடலை. என் குடும்பத்து சார்பா நான் உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன். இன்னும் ஒரு வருசத்துல அக்கா கல்யாணத்தை முடிச்சுடலாமுன்னு இருக்கேன். அதுவரைக்கும் எனக்கு உதவி செய்வியா குமாரு? கேட்டவனின் கைகளை ஆதரவாய் பற்றிக்கொண்டு நீ தைரியமா போ, உங்கக்காளுக்கு நானும் ஒரு தம்பிதான்கறதை மறக்க மாட்டேன்.
உள்ளே வந்த குமரப்பனின் மனைவி கடைசியாக பேசிய பேச்சுக்கள் காதில் விழுந்ததை காட்டுவதற்க்காக நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்கண்னே, நாங்க இருக்கோம் என்றவள் இருவருக்கும் காப்பி போடுவதற்க்காக குசினிக்குள் நுழைந்தாள்.