வாலிபக் கவிஞர் வாலி
வாலிபக் கவிஞர் வாலி
வாலிபர்கள் நெஞ்சத்தில் வாலிக்கோ இடமுண்டு .
காலியாய் இருப்போரும் காதலில் விழுந்திடுவர் .
வேலியில்லாப் பயிர்போல வேகமுடன் பற்றிடுவர் .
காலில்லாக் காளையர்க்கும் காலாகும் இவர்பாக்கள் .
மல்லிகையும் மயங்குகின்ற மன்மதனாய் கவிகளிலே
பல்சுவையும் கூட்டுகின்றப் பாசமிகு கவிஞரிவர் .
மாதவியும் மயிலாகி மண்ணுலகில் தோகைவிரிப்பாள் .
ஏகாந்தம் மிக்குடைய ஏற்றமிகும் எழுத்தாணி .
புன்னகை மன்னனை பூவிழிக் கண்ணனை
வண்ணமிகு பாட்டினிலே வகையுறவே வடித்தவராம் .
தென்றலிலே மிதந்துவரும் தெம்மாங்கு கீதங்கள்
காற்றுவாங்கப் போனாலோ காலமெல்லாம் இசைக்குமே .
ஆண்டுக்கு ஆண்டு ஆசுகவி ஆனவராம்
தீண்டுகின்ற எழுத்தெல்லாம் தீந்தமிழை ருசிபார்க்கும் .
வேண்டுகின்றேன் இறைமையிடம் வேண்டுமிங்கே வாலியுமே
மீண்டிடலாம் சோகத்திலிருந்து மீமிசையில் உண்மையன்றோ .
சரஸ்வதி பாஸ்கரன்