சிலம்ப மாஸ்டர்

சிறுகதை
சிலம்ப மாஸ்டர்
(கோவி.தமிழ்ச்செல்வி)


காரில் அமர்ந்து ஏதோ நாவலைப் புரட்டிக் கொண்டிருந்த வளர்மதி அவசரமாக அதனை மூடி வைத்தாள்.இறங்கிச் சென்று இன்னமுதனைப் பார்வையால் தேடினாள்.அவனுக்கு எட்டே வயதுதான் என்றாலும் அதிகச் சுட்டித்தனம்.அறிவுப்பூர்வமான கேள்விகளால் மூத்தவர்களையும் திக்குமுக்காட வைத்து அவனே வெற்றியும் பெறுவான்.ஆகவே,தான் சிலம்பம் போன்ற தற்காப்புக்கலையில் அவனை ஈடுபடுத்த வளர்மதி முடிவெடுத்தாள்.முப்பதைந்தாண்டுகள் மாணவர்களோடு இரண்டறக் கலந்து வாழ்ந்துவிட்டவருக்குத் தன் பேரனுக்கு என்ன தேவை என்பது தெரியாமலா போகும் என்ற எண்ணத்தில் மகனும் மருமகளும் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.
படியிலிருந்து இறங்கி வரும்போதே இரண்டிரண்டு படிகளாக எட்டித்தாவிக் கொண்டே கையில் இருந்த நீர்ப்புட்டியைத் தன் இடது கையால் சுழற்றியபடி வருவதைப் பார்க்கச் சற்றுத் தயக்கமாக இருந்தாலும் , அவன் கீழே இறங்கி வரும் வரை அமைதியாகக் காத்திருந்தாள் அந்த முன்னாள் தலைமையாசிரியை.கீழே வந்தவனின் கையைப் பற்றியவள் அவனது நீர்ப்புட்டியை வாங்கிக் கொண்டாள்.குதித்துக் கொண்டே காரில் ஏறி அமர்ந்தான்.ஆயிரக்கணக்கான மாணவர்களைக் கண்டித்து வழி நடத்திய அந்தக் கண்டிப்பான தலைமையாசிரியர் அமைதியாகவே இருந்தாள்.
“ஏன் பாட்டிமா? ஒன்னுமே பேசமாட்றீங்க? பல்லு வலியா?” என்று உரையாடலை ஆரம்பித்தான். “இன்னா.....பாட்டிமா கோபமா இருக்கேன்!” என்றாள் அவனைத் திரும்பிப் பார்க்காமலே. “ ஏன்? என்னாச்சி? யார் உங்களுக்குப் புரோபலம் குடுக்கறது? சொல்லுங்க! நான் இருக்கேன்.பிரௌன்ட் பெல்ட் வச்சிருக்கேன். எங்க மாஸ்டர் எப்படி தாக்கனும்னு சொல்லிக் கொடுத்திருக்கார். ஆளக் காட்டுங்க...நான் போட்டுத் தாக்கறேன்!” ஆர்வத்துடன் இன்னமுதன் சொல்வதை அமைதியாகச் செவிமடுத்த வளர்மதிக்கு உள்ளூரப் பெருமிதமாகவே இருந்தது.
“வேற யாரு? என் பக்கத்துல உட்கார்ந்திருக்கற செல்லக்குட்டிதான்!” என்று சொல்லிவிட்டு கடைக்கண்ணால் பார்க்கையில் அவனது புருவங்கள் கேள்விக்குறிகளாக வளைந்தும் குறுகுறுத்த விழிகள் அகன்று விரிந்தும் இருந்தன. பாட்டிமாவையே ஆச்சரியத்துடன் பல கேள்விகளை மௌனமாக அடுக்கிக் கொண்டிருந்தான். அவன் தன் வாயைத் .திறந்து வினா அம்புகளைத் தொடுப்பதற்குள், “நீ என் செல்லமா? இல்லையா? என் செல்லம்னா நான் சொல்றதைக் கேட்கணும் தானே? அதென்ன படிக்கட்டில் குதித்துக் குதித்து வர்றது? கொண்டு போன தண்ணி அப்படியே இருக்கு. குடிக்கல.அப்புறம் போத்தலை சுழற்றிக்கிட்டே வந்தீங்க.பக்கத்துல வந்தவங்க மேல பட்டிருந்தா என்னா ஆகியிருக்கும்?அதனால இன்றைக்கி நோ சைக்களிங்!” அவன் தன்னைத் தற்காத்துப் பேச வாய்ப்பளிக்கும் வண்ணம் வளர்மதி அமைதியானாள்.
“நான் இன்னிக்கி எவ்வள ஹெப்பியா வந்தேன் தெரியுமா? நீங்க உம்முன்னு இருந்ததால கூட் நியூஸ கூட சொல்லவே இல்ல!” கொழுகொழு கன்னங்கள் மேலும் உப்பிக் கொண்டதைப் பார்த்ததும் வாரி அணைத்து கன்னங்களைச் செல்லமாகக் கடிக்க வேண்டும் போலிருந்தது என்றாலும் எதையும் காட்டிக் கொள்ளாதவளாய் பயணத்தில் குறியாக இருந்தாள்.பதிலேதும் இல்லாததால் “ஓகே,சோரி.இனிமேல் அப்படிச் செய்ய மாட்டேன்.படியில கவனமா நடத்து வர்றேன். ஒகேவா? பேரன் பாட்டிமாவை நோக்கினான்; பதிலில்லை. “இன்னிக்கி மட்டும்தான் தண்ணி குடிக்கலை.மாஸ்டர் இன்றைக்கு ஸ்பேஷல் பார்ட்டி குடுத்தாரு...அதுல ஜூஸும் குடுத்தாரு.அதான்...கொண்டு வந்த தண்ணிய குடிக்கல பாட்டிமா.இனி ஜூஸ் குடிக்க மாட்டேன்.கொண்டு வர்ற தண்ணிய குடிச்சி முடிச்சிடறேன்.பிளீஸ் . . . .பிளீஸ்...” பேரனின் கொஞ்சலில் பாட்டிமாவின் பொய்க்கோபம் மறைந்து போயிற்று. 87
“ஓகே...ஏன் மாஸ்டர் பார்ட்டி கொடுத்தாரு? ” என்ற இப்படியொரு வாய்ப்புக்குத் தான் பையன் இவ்வளவு நேரம் காத்திருந்தான். “தோனமன்ல எங்க டீம் தான் சாம்பியன். அதான்! சண்டே பரிசு கொடுப்பாங்க. மாஸ்டர் பேரண்ஸ் எல்லாரையும் வரச் சொன்னாரு,எனக்கு கோல்ட் மெடல் கிடைக்கப்போகுது. ஆய் எம் தே வின்னர்!” என்ற அவனது கூச்சல் வீடு போய் சேரும் வரை தொடர்ந்தது. 43
பையன் ஆவலோடு காத்திருந்த ஞாயிறும் வந்தது. “மாஸ்டர் உங்களைக் கட்டாயம் வரச் சொன்னார்,” என்று பாட்டிமாவை வற்புறுத்தி இழுத்துச் சென்றான்.மண்டபத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமூக இடைவெளியைப் பின்பற்றி இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. முகக்கவரி அணிய வேண்டியிருந்ததால் பலரது முகங்களை அடையாளம் காண முடியவில்லை. நிகழ்ச்சி ஆரம்பமாகவிருப்பதாக நெறியாளர் அறிவிக்கவே ,வளர்மதி கடைசி வரிசையில் காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.திறன்பேசியை அமைதிப்படுத்திக் கொண்டாள்.46
அவளை நோக்கி ஓர் உருவம் வேகமாக நடந்து வந்தது. “வணக்கம் ஆசிரியை.நீங்க முன் வரிசைக்கு வாங்க!” என்று அழைத்தக் இந்தக் குரல் எங்கோ எப்போதோ கேட்டக் குரலாக இருந்தது. முகக்கவரியைச் சற்றே நீக்கிவிட்டு “நான் நீலாய் தமிழ்ப்பள்ளியில உங்க மாணவன் சஞ்சீவன். எனக்குப் படிப்பு சரியா வரல.நீங்க தான் சொன்னீங்க.கைத்தொழில் ஒன்னு தெரிஞ்ஜா போதும்.வாழ்க்கையில சாதிச்சிக் காட்டலாம்னு. அதனால அப்பா மாதிரியே சிலம்பத்துக்கு வந்துட்டேன். எல்லாம் நீங்க கொடுத்த உற்சாகம் தான் டீச்சர். நம்ம சிலம்ப மாணவர்கள் அனைத்துலக ரீதியில சாதனை படைச்சிக்கிட்டு இருக்காங்க.பிளீஸ் டீச்சர். முன்னுக்கு வாங்க என்று கையைப்பற்றி அழைத்துச் சென்றவனின் பின்னே, படிப்பில் பின் தங்கிய மேலும் ஒரு மாணவனின் வெற்றியைக் கண்ட களிப்போடு வளர்மதி நடந்தாள்.
---முற்றும்----

எழுதியவர் : தமிழ்ச்செல்வி கோவிந்தராஜ (6-Jan-21, 9:13 pm)
பார்வை : 102

மேலே