பெண்ணியம் பேசும் நேரமிது

பெண்மை....

வார்த்தைகளால் வருணிக்க முடியாத அற்புத படைப்பு....

எத்தனை பரிணாமங்கள்... அதற்குள் எத்தனை பரிதாபங்கள்...!!!

தெய்வங்களில் பெண் தெய்வங்கள் தான் அதிகம். நதிகளுக்கெல்லாம் பெண்களின் பெயர் சொல்லித்தான் பெருமைப்படுத்தி இருக்கிறோம். அழகிய மலர்களின் பெயரை கூட பெண்களுக்கு தான் சூட்டுகிறோம். ஏனெனில், பெண்தான் அந்த பெயர்களை சுமக்க பொருத்தமானவள்... இப்படியெல்லாம் சொல்லும்போது பெருமையாக இருக்கிறதல்லவா... இனிமையாக இனிக்கிறதல்லவா... கண்மூடி சிந்தித்தால், கவிதையாய் காட்சி தருகிறாள் பெண் எனும் விந்தை...

ஆனால், இங்கே கவிதை எழுதி, கனவை தூண்ட நான் வரவில்லை. கண்களை திறந்து பார் என்று நிஜத்தின் உண்மை உரைக்கவே இந்த கட்டுரை... என்ன நிஜம்...?? என்ன உண்மை???

"பெண்கள் முன்னேற்றம்" - சங்ககாலத்தில் இருந்து ஒலித்து வரும் ஒரு ஓசை...

"சாதனைப் பெண்கள்" - இந்த காலத்தில் தெருவெங்கும் ஒலிக்கும் ஒரு ஓசை...

பெண் முன்னேற்றத்தை வைத்துத்தான் பல காலங்களாக, அரசியல், சினிமா, விளம்பரம், தொழில்துறை என பல்வேறு துறைகள், தன் வளர்ச்சியை தீர்மானம் செய்துகொண்டன. எல்லா இடத்திலும் பெண்ணுக்கு முன்னிலை....!!!

உலக பெண்கள் தினம், தேசிய பெண்கள் தினம், அன்னையர் தினம், தேசிய பெண் குழந்தைகள் தினம் என பெண் இனத்தின் சேவையை போற்றி, பெண்மையைப் பாதுகாக்க பல வருடங்களாக பல தினங்களை கொண்டாடி வருகிறோம். என்ன பலன் கண்டோம்... மனம் திறந்து கொஞ்சம் உண்மையைப் பேசும் நேரமிது...

"என்னவோ, சாதனைப் பெண்களே இல்லாதமாதிரி பேசாதே" என்று நீங்கள் உள்ளுக்குள் சொல்வது, எனக்கு உரக்க கேட்கிறது. மொத்தப் பெண் இனத்தில், எத்தனை சதவீதம் சாதனை படைத்தார்கள்... மீதம் இருப்பவர்களின் நிலை என்ன...???

'சரி பெண் முன்னேற்றத்திற்கு உன் கருத்தென்ன' என்று நீங்கள் கேட்கலாம்... ஆனால், நான் பேச வந்தது என் இனத்தின் முன்னேற்றம் பற்றியல்ல... பாதுகாப்பு...!!! பாதுகாப்பே இல்லாமல் என் இனம் கண் முன்னே சிதைந்து கொண்டிருக்கும் போது... முன்னேற்றத்தை பற்றி பேசும் முட்டாள் அல்ல!

நாகரீகத்தின் உச்சம் கண்டு, அதை இந்த உலகிற்கே சொல்லிக்கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள் என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். ... ஆனால், இன்று சமூகத்தில் நடப்பது என்ன??? இதையா நாம் நம் முன்னோர்களிடம் இருந்து கற்றுக்கொண்டோம்.... மலர்களையே அனுமதியின்றி பறிக்கக்கூடாது எனும் போது, மலர்வதற்கு முன்பே சிதைப்பது எப்படி சரியாகும்.??? வாருங்கள் பெண்ணியம் பற்றி பேசலாம்...!!!

பிஞ்சு மலர்கள், மலர்வதற்கு முன்பே, மொட்டாக இருக்கும்போதே சிதைந்து போவது எந்த விதத்தில் நியாயம். ஆசையுடன் தானே தன் பெண் குழந்தையை ஒரு அன்னை பெற்றெடுத்திருப்பாள். பல கனவுகளுடன் தானே அதை சீராட்டி, பாராட்டி வளர்த்திருப்பாள். தான் இந்த உலகத்தில் அனுபவிக்காத அத்தனை இன்பங்களையும் தன் மகள் அனுபவிக்க வேண்டும் என்றுதானே பல வேதனைகளையும் கடந்திருப்பாள்.

ஒரு பெண் குழந்தையை வளர்க்கும் பெற்றவர்களின் மனநிலை தெரியுமா...?

தன் அன்னையே தனக்கு மகளாக பிறந்ததாக ஒரு தகப்பன் பாராட்டுவான். தன் உற்ற தோழி இவளே என்று ஒரு தாய் சீராட்டுவாள். பெண் குழந்தைகளின் வளர்ச்சியில் அந்த பெற்றோர்கள் எத்தனை எத்தனை இனிமையை அனுபவித்திருப்பார்கள். அத்தனை கனவுகளும், ஆசைகளும், எதிர்காலமும் தன் கண் முன்னே எவனோ ஒரு அரக்கனின், அசிங்கமான நோக்கத்தால், சிதைக்கப்படுவது எந்த விதத்தில் நியாயமாகும். என் வீட்டில் நடக்கவில்லை, அதனால் என்னை பாதிக்காது என்று உங்களாலோ, என்னாலோ கடந்து சென்றுவிட முடிகிறதா...???

இதற்கு முன்பெல்லாம் இப்படி இல்லையே... இப்போது எங்கிருந்து வந்தன அந்த பிசாசுகள்... எப்படி நம்மிடையே வளர்ந்தன அந்த பிசாசுகள்.... ஏன் அவற்றை அடையாளம் கண்டுகொண்டு அழிக்காமல் இன்னும் விட்டு வைத்திருக்கிறோம். விவசாயி நாற்றுக்கு நடுவில் களையெடுத்து, தன் நாற்றை காப்பது போல, நாம் ஏன் இன்னும் இவர்களை களையெடுக்காமல் விட்டு வைத்திருக்கிறோம். நம் சந்ததிகளை நாசம் செய்யும் இந்த பிசாசுகளை என்ன செய்ய போகிறோம்...????

தெருவில் விளையாடும் 6-9 வயது பெண் பிஞ்சுகளுக்கு எது தவறு, எது சரி என்று எப்படி தெரியும்...?? அதற்குத்தான் good touch, bad touch சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும் என்று நீங்கள் சொல்லலாம்...

ஆனால், வலுக்கட்டாயமாக, அவர்களை வதைக்கும் அரக்கர்களை என்ன செய்வது...?? பயந்து வெளியில் அனுப்பாமல், வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்து விடலாமா???

அப்போது, அந்த குழந்தைகளின் மனநிலை ஆரோக்கியமாக இருக்குமா...??? வீட்டிற்குள்ளேயே அடைத்துவைத்து, பருவம் அடைந்த பிறகு, வெளியில் வந்தால், அவள் பாதுகாப்பாய் இருப்பாளா...??? அவளுக்கு தன்னை எங்கனம் காத்து கொள்ள வேண்டும் என்று தெரிந்துவிடுமா...???

என்ன வழி என்று என்னிடம் கேட்காதீர்கள்...நான் வழி சொல்ல வரவில்லை.... எனக்குள் இருக்கும் இந்த நெருப்பு உங்களுக்குள்ளும் நிச்சயம் எரிந்து கொண்டுதான் இருக்கும்.... எரிந்து கொண்டிருக்கும் தணல் அணைந்துவிடாமல், எரிமலையாய் மாறி, நம் எதிர்கால தீபங்கள் அணையாமல் காத்திட வேண்டும்...

என்ன செய்யலாம் .... ????

(இந்த கேள்வியை நான் பெண்ணினத்திடம் மட்டும் கேட்கவில்லை கண்ணியமிக்க ஆணினத்திடமும் தான் கேட்கிறேன். ஏனெனில், உங்களுக்கு இடையில், ஆண் என்ற வேடமிட்ட அரக்கர்கள் தங்களின் அசிங்கமான உணர்ச்சிக்கு அழகிய மலர்களை சிதைத்து, சீரழிப்பது எங்கனம் சரியாகும்...?? இதற்கு உங்கள் நிலை என்ன...??? உங்கள் பதில் என்ன???)

எழுதியவர் : Parveen (29-Jul-22, 4:03 pm)
சேர்த்தது : Parveen
பார்வை : 252

மேலே