------வீரத் தமிழச்சியின் வரலாறு-----

------வீரத் தமிழச்சியின் வரலாறு-----

நம் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று ஆண்களுக்கு நிகராக அதிகமாக போராடியவர் உயர்திரு சொர்ணத்தம்மாள். அடி உதையோடு அவமானங்களையும் சந்தித்தார். லத்தியடியால் அவரின் செவிமடல் கிழிந்து காது கேட்க்கும் திறனை இழந்தார். இதை எண்ணுகிற போதே எனக்குள் ஒரு வீரமும் சுரந்து உடம்பு மெய் சிலிர்க்கிறது.

நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு போராளி இவர். மதுரை கடச்சனேந்தலில் வசித்து வந்த சொர்ணத்தம்மாள் ஆவார். ஏனென்றால் விடுதலை போரில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்த அடி, உதை, சிறை, சித்ரவதை ஆகியவற்றையும் அனுபவித்தவர் ஆவார். சுதந்திர போராட்ட தியாகி மதுரை எஸ். ஆர். என். ஷேசபாகவதரின் மனைவியாகிய சொர்ணத்தம்மாள் தன் கணவர் பணி புரியும் கம்பெனியில் தானும் வேலை பார்த்ததோடு சுதந்திர போராட்ட உணர்வு ஜோதியில் கலந்து கொள்ளத் தயாரானார். அப்பொழுது அவருக்கு வயது 26.

நமது தேசம் சுதந்திரம் அடைய மகாத்மா எடுத்த கடைசி ஆயுதமான "வெள்ளையனே வெளியேறு" இயக்கம் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் பரவிக் கொண்டிருந்த காலம் 1942-ல் தென் மாவட்டங்கள் முழுக்க சுதந்திரப் போராட்ட புயல் வீசியது.

1930-களில் இருந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட கே.பி. ஜானகியம்மாள், கேப்டன் லெட்சுமி, ருக்மணி லெட்சுமிபதி, அம்மு சுவாமிநாதன், அம்புஜம்மாள், மீனா கிருஷ்ணசாமி, என்.எஸ். ருக்மணியம்மாள், நாகம்மையார் மற்றும் பத்மாசினி அம்மையார் ஆகியோர் மிகப்பெரிய சமூக, கல்வி, ஜாதி, பொருளாதார பின்புலம் கொண்டவர்களாய் இருந்தனர். ஆனால் மதுரை சொர்ணத்தம்மாள் தினசரி கூலி வேலை செய்யும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பொழுதெல்லாம் கதர் சட்டை, வேட்டி சேலை அணிந்தாலோ, வந்தேமாதரம் என்று மெல்ல சொன்னால் கூட போலீஸ்கார்கள் லத்தியால் அடித்து துவைத்து விடுவார்கள். முதல்முறையாக கணவருடன் மறியல் போராட்டத்தில் குதித்து கோஷமிட்ட சொர்ணத்தம்மாளை கைது செய்து ஒரு வாரம் சிறையில் அடைத்தனர்.

விடுதலையாகி வெளியில் வந்த சொர்ணத்தம்மாள் ஜோடி மீண்டும் மறியலில் ஈடுபட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்றாவதாக சொர்ணத்தம்மாள் மட்டும் கணவர் துணையின்றி மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு மதுரையில் இருந்து வேலூருக்கு ஆறு மாதம் சிறை தண்டனையோடு அனுப்பி வைக்கப்படுகினறார். "இந்த தேசம் சுதந்திரம் அடைய வேண்டும், அதற்குரிய தருணம் இதுவே. நாம் தொடர்மறியலில் ஈடுபட வேண்டும் காந்தியடிகளின் உத்தரவே வேதவாக்கு" என்ற வெளிப்படையான, வீரம்மிக்க கொள்கை மட்டுமே சொர்ணத்தம்மாளின் எண்ணங்களிலும், செயல்களிலும் ஆக்கிரமித்திருந்தது. ஆறுமாத சிறை தண்டனை முடிந்து வந்ததும் மீண்டும் தயாரானார் மறியலுக்கு.

உதட்டு சாயம் அழகுசாதன பொருள்கள் வாங்குவதில் நேரம் செலவிடும் பெண்களே, அழகு மட்டும்தான் நம் பெரிய சக்தி என்று போற்றும் பெண்களே கவனியுங்கள். ஏழ்மை உறைந்து நிற்கும் நமது தேசத்தின் வரைபடத்திலிருந்து இரு கைகள் முளைத்து வந்து நம் முகத்தில் அறையும். இன்றைய பெண்களுக்கு உடை என்பது ரசனைக்கும், கற்பனைத் திறனுக்கும் உடல் அசைவுக்கு (Body Language ) மான ஒரு காட்சிப் பொருள். ஆனால் தியாகி சொர்ணத்தம்மாளுக்கு உடை என்பது இந்த தேசம் அல்லது சுதந்திரப் போராட்டம் அல்லது தியாகம் ஆகிய ஏதாவதொன்றின் அடையாளம்.

ஒவ்வொரு விடுதலைக்குப் பின்னும் மீண்டும் மீண்டும் மறியலில் ஈடுபட்டுக் கைதாகும். சொர்ணத்தம்மாளைச் சமாளிக்க போலீஸ் நிர்வாகம் திணறியது. பெண் கைதி என்பதால் கைது, விசாரணை, சிறை என ஒவ்வொரு கட்டத்திலும் தனித்துவமான வசதியை ஏற்படுத்தி தர அக்காலத்தில் திணறியது போலீஸ். ஆகையால் இவரையும் இவருடன் போராட்டத்தில் ஈடுபடும் லட்சுமிபாய் அம்மையாரையும் மதுரை - விளக்குத்தூண் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்தனர். இருவரில் சந்று வேகமான சொர்ணத்தம்மாளை உன்னை மறியலில் ஈடுபடுத்தும் தலைவர் யார்? என்று கேட்டு அடித்துத் துவைத்தனர். காலையிலிருந்து இரவு 10 மணி வரை தடியால், செருப்பால், பெல்ட்டால், கையால், காலால் அடித்துக் கொண்டேயிருந்தனர். எதற்கும் அசரவில்லை சொர்ணத்தம்மாள். ஒரு கட்டத்தில் தடியால் காதிலும் முகத்திலும் அடிக்க ஆரம்பித்தனர் போலீசார். வலி தாங்க மடியாமல் கதறினார். காது ஜவ்வு கிழிந்ததால் அன்றிலிருந்து அவருக்கு ஒரு காது செவிடாகியது.

மறியலைக் கைவிட மாட்டேன் என்று பிடிவாதமாக நின்றதால் சொர்ணத்தம்மாள், லட்சுமிபாய் இருவரும் உடுத்தியிருந்த கைத்தறி சேலைகளை உருவி கிட்டத்தட்ட முக்கால் நிர்வாணமாக்கி ஆளுக்கொரு தாவணி போன்ற ஆறுமுழச் சேலையை கொடுத்து உடுத்த வைத்தனர். உடம்பை முழுதாக மறைக்க முடியாத இந்த ஆறு முழ துணியை உடுத்திக் கொண்ட இருவரும் கூசிப் போயினர். பின்னர் உச்சபட்ச கொடுமை நடந்தேறியது. 10 போலீஸ்காரர்களுடன் இரு பெண்களையும் ஏற்றிக் கொண்ட லாரி ஏறத்தாழ 15 மைல் பிரயாணம் செய்து ஒரு காட்டுக்குள் இரண்டு பெண்களையும் இறக்கிவிட்டு ஊரை விட்டு ஓடிப்போய் எங்காவது பிழைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் மதுரை எல்லைக்குள் வந்து மறியலில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தும் அனுப்பப்பட்டனர்.

இந்திய சுதந்திரப் போன்விழா மலர் 1997 என்ற தீக்கதிர் வெளியிட்ட கட்டுரை பேட்டியில் "பஸ் பாஸ், ரயில் பாஸ், பென்சன் கிடைக்கும் என்று நாங்கள் போராடவில்லை. சுதந்திரத்திற்காகத்தான் போராடினோம், சிறை சென்றோம்" என்று வீரத்தியாகி சொர்ணத்தம்மாள் கூறியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் பதவி வேண்டுமா என்று ஒரு வேளை மத்திய அரசிலிருப்பவர்கள் கேட்டிருந்தால் கூட இதே பதிலைத்தான் சொல்லியிருப்பார் பாரதத்தாயின் மூத்த மகள் சொர்ணத்தாயம்மாள்.

இப்படி தீப்போல் எரிந்து வாழ்த்த நம் இன பெண்மணியை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

நம் தமிழச்சி எத்தனை வீரமுடையவள் என்பதை இதன் வாயிலாக அறிந்தோம். நம் தாய் பாலின் நிறம் வெள்ளை என்றபோதும் வீரம், மானம்,போராடும் குணம் போன்ற தாது பொருட்களை உடையது நம் தாய்ப்பால் என்பதை யாரும் மறுக்க முடியாது. மறக்க முடியாது.


நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம்.
---பாரதி----


படித்ததை பகிர்ந்த்கொள்ளும்
தமிழ்தாசன்

எழுதியவர் : தமிழ்தாசன் (21-Mar-12, 6:27 pm)
பார்வை : 3424

மேலே