தொழிலாளி வாழ்க்கை போல்…

நேற்றுத்தான் வந்திருந்தான்
வங்கியில் தொழில் புரியும் நண்பன்
முகத்தில் ஒளியில்லை
அகத்தில் மலர்வு இல்லை
வாட்டம் என்ன என்று கேட்டேன்
சலித்துக் கொண்டான்
எடுத்தவர் கொடுப்பதில்லை
கொடுப்பவர் எடுப்பதில்லை
பொடி வைத்துப் பேசினான்.
என்னடா என்றேன்.
சொல்லி மாளாது என்றான்.
உனக்கென்னடா மச்சான்
உத்தியோகம் கௌரவம்
எனக்கப்பிடியா என்றான்
வங்கித்தொழில் தானே
வாய்ப்பானது எண்டு
வாய் பிளக்கிறார்கள் என்றேன்.
நித்திரை வராது மச்சான்
நித்தம் ஒரு பிரச்சனை
ஒன்றச் சரிக்கட்டினா
இன்னொரு பூதம்
புதிசாக் கிளம்பும்.
பூதத்தையும் சரிக்கட்டி
சட்டைப் பொக்கற்றுக்கை வச்சா
மற்றப் பக்கத்தால
சுனாமி ஒன்று கிளம்பும்…
சின்ன வயதிலை எங்களோட படிச்சானே
சின்னான் சின்னான் எண்டு சொல்லுவமே
சீமெந்து குழைச்சு அப்புற வேலை
கடன் கேட்டு வந்தவன்
உடன் பட்டுட்டன்
உண்மையைச் சொன்னா
அவன்ர வாழ்க்கை தான் வாழ்க்கை
என்றவன் சொல்ல
தொலைபேசி அழைப்பு எனக்கு.
பேசிமுடித்த எனது முகம் இறுகுகிறது.
என்னடா என்றான் நண்பன்
பணிப்பாளர் பதவியிலிருந்து மாற்றமாம்
மாகாண அலுவலகத்திற்கு போகட்டாம்
ஏனடா மச்சான் என்ன நடந்தது
எல்லாம் மேலிடத்துச் சமாச்சாரம்
என நான் சலிக்கிறேன்.

எழுதியவர் : அழ. பகீரதன் (27-Dec-12, 10:11 am)
சேர்த்தது : அழ.பகீரதன்
பார்வை : 147

மேலே