பெண்ணுக்குள் பூகம்பம்

சலனமில்லாமல் மென்மையாய்

பொறுமையின் இருப்பிடமாய்

அமைதியாக நகரும் நதியென

வாழும் பெண் பொறுமையிழந்து

கொந்தளிக்கிறாள் ......எப்போது??

அன்பே ஆயுதமாய்

கனிவே படைகலன் என

வாழும் அவளிடம்

அநீதி எனும் விஷக் கணைகள்

தொடுக்கப்படும்போது......

வெற்றிச்சிகரத்தை எட்ட

விடா முயற்சியுடன்

தன் சுகம் மறந்து

மாடாய் உழைத்து

உருக்குலைந்து போய்

வெற்றிக்கனி கைகளுக்கு வரும் நொடியில்

தட்டிப்பறித்து உதாசீனப் படுத்தப்படும்போது........

பொறுமையே கைக்கொண்டு

எக்காளமிடும் ஆரவாரத்தை

கருத்தில் கொள்ளாதபோதும்

அது எல்லை மீறும்

அந்த ஒரு நொடி.....

பெண் பூகம்பமாகிறாள்......

எழுதியவர் : பி.தமிழ் முகில் (18-Nov-11, 7:09 am)
சேர்த்தது : Tamizhmuhil
பார்வை : 486

மேலே