மனித வாழ்வே புனிதமாகும்

பசித்திடும் உயிர்க்கு உணவும் இல்லை !
பகிர்ந்திடும் எண்ணம் பாரினில் இல்லை

ஈகையும் இரக்கமும் இவ்வுலகில் இல்லை
ஈரமுள்ள உள்ளங்கள் உதவுவதும் இல்லை !

கண்டிடும் காட்சி கல்மனதும் கரைந்திடும்
சுண்டிடும் மனதை தீண்டிடும் உணர்வுகள் !

சிறுவனின் இதயம் இமயமாய் தெரிகிறது
அவன் நெஞ்சத்தின் அருமை புரிகிறது !

இளமை பருவத்திலே இக்குணம் இருப்பின்
இரக்கமும் வளரும் ஈரமும் நிறைந்திடும் !

பரந்த மனங்கள் மழலைமுதலே இருந்தால்
மனித வாழ்வே புனிதமாகும் இறுதிவரை !

இருப்பவர்கள் உதவிடுங்கள் இல்லார்க்கு
இல்லாதநிலை இப்புவியில் நிலைக்கட்டும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (22-Jul-13, 9:48 pm)
பார்வை : 47

மேலே