மீண்டும் வானம்பாடி
![](https://eluthu.com/images/loading.gif)
பாடல் புனையு மவ் வானம்பாடி
வேடர் பயத்தினில் பாதை ஓடி
ஆடல் மயிலிடம் புகலிடம் நாடிப்
பாடல் மறந்தது நர்த்தனம் ஆடி !
நந்தி மணக்கும் நறுமலர்த் தோட்டம்
அந்தி விழிக்கும் மல்லிகைக் கூட்டம்
சிந்திச் சிரிக்கும் கருமுகி லோட்டம்
இந்தக் களிப்பில் இருந்திட நாட்டம் !
மெய்யை மாற்றுது நிமிடச் சலனம்
பொய்யைப் போக்கப் பிறந்தது ஞாலம்
உய்யும் உலகம், இருந்தால் "தானாய்"
பைய உணர்ந்து பார்த்தது மேலாய்
திறந்தது வானம் திசைகள் காட்டி
நிரந்தர பலத்தை சிறகில் பூட்டி
மறந்தது தன்னை மனதில் மீட்டிப்
பறந்தது மீண்டு மவ் வானம்பாடி.