ஓஷோ

இந்த நூற்றாண்டில்
கைவிட்டு எண்ணக் கூடிய
தத்துவ ஞானிகளில்
தனிஇடம் பிடித்தவன்...

'செக்ஸ் சாமியார்'!!
செக்ஸைப் பற்றியே
சிந்திக்கும் திருக்கூட்டம்
அவனுக்கிட்ட பட்டம்!

கிழக்கு மண்ணை
மேற்கு வானம்
குனிந்து பார்க்கச் செய்த
கொண்டாட்டப் பிரியன்...

உலக மதங்களின்
ஒட்டுமொத்த உண்மையை
போட்டுடைத்தவன்!

இவன் இந்தியன் என்பதில்
இந்தியா பெருமைப் படலாம்...
இன்றில்லை என்றாலும்,
நாளை!!.....

ஆயுதமின்றியே
அமெரிக்காவை
ஆட வைத்த தனியன்!

சிந்தனை செருக்கால்,
குழப்பம் மூலம்
தெளிவை உணர்த்தும் கவிஞன்!

மனிதன் அழுகை,
மனத்தின் கண்ணீர்,
துடைக்கும் வழி கண்டான்!

அரசியல் எனும்
அசிங்கத்தை
அடியோடழித்தால்,

மதம் என்ற ஒன்றையே
மனிதன் மறந்தால்
சங்கடமில்லை!! எனும்
சத்தியம் சொன்னான்!!
சாத்தியம் தானா?!

ஊழலின் தலையீடு
உருக்குலைத்தது அரசியலின்
உண்மை வடிவை...

மனங்களின் சுயநலம்
மாய்த்தே விட்டது
மதங்களின் மாண்பினை..

புதுமை சொல்லவில்லை அவன்
நம்மை புதுப்பித்துக்
கொள்ள சொன்னான்

நிகழ்காலம் மட்டுமே
நிசமேன்றோர் புது
'இசம்' சொன்னான்...

அவன் தொட்டுப் பேசாத
தலைப்பே இல்லை...
இன்று அவனை அறிந்ததால்..
இந்த பொழுதை
நீ வாழ்ந்த பொழுதாய்
எழுதிக் கொள்!.....

எழுதியவர் : அபி @ முஹம்மது நௌபல் (27-Sep-14, 1:33 pm)
பார்வை : 217

மேலே