அவளே என்
அவளை முதன்முதலாய் கண்டதும் தான்
நான் இவ்வுலகில் பிறந்தேனோ?
அந்த முகம் தான் இனியென்
உலகம் என்பதை அறியேனோ?
அந்த காந்த கருவிழிகள்
அசைந்தாடும் கார்குழல்கல்
ஒளிர்விட்டு மின்னும் பல்வரிசைகள்
மனம் மயக்கும் மகரந்த புன்னகை
கான குயில் பேச்சு, நளின பாவங்கள் .....
செந்தமிழில் ஏனோ வார்த்தைகள் வரண்டுவிட்டன
அவளை வர்ணிக்கும்போது !
ஏனோ அவளை கண்டதும் அழுகிறேன் ,அவளை அழைக்க விழைகிறேன்..
என்னை கட்டி அணைத்தாள் ,அழுகை நின்றது
இந்த பூமி என்னை சுற்றலானது
அன்று முதல்
அனுஅனுவாய் என்னை ரசிப்பாள்
கன்னங்களை கிள்ளி அள்ளி அமுதென ருசிப்பாள்
செல்ல சண்டைகள் இடுவாள்
மெல்ல என் காதினை திருகி ,என் குறும்புகளை ரசிப்பாள்
உண்ண அமிர்தம் படைப்பாள் உறங்க கானங்கள் இசைப்பாள்
ரசிக்க நடனங்கள் புரிவாள்
என்னை மெல்ல மெல்ல தட்டி தட்டி மெட்டுக்கள் அமைப்பாள்
பூமியாய் இந்த சூரியனை சுற்றுவாள்
நிலவாய் ஒளிர்வாள் ,
நட்சத்திரமாய் மிளிர்வாள்
உள்ளத்திலும் சுமப்பாள் ,உயிர் உள்ளவரை சுமப்பாள்
என்னை எவரையும் விட அதிகம் ரசிப்பாள்
நான் சிரிக்கையில் சிரிப்பாள்
அழுகையில் அழுவாள்
தவறுகளை கண்டிப்பாள்
சிலசமயம் கோவத்தில் தண்டிப்பாள்
பின்பு தண்டித்ததால் துடிப்பாள்
முத்தங்களால் என் காயங்கள் ஆற்றிடுவாள்!
என் மேல் நான் கொண்ட அக்கறை
அவள் மேல் எனக்குள்ள அக்கறை
அவள் மேல் அவளுக்குள்ள அக்கறை
இவையாவும் கடுகளவே ....
அவள் என் மேல் கொண்ட அக்கறை முன் !
நானே இவ்வுலகின் சக்கரவர்த்தி ,அவள் வியர்வை முத்துக்களை சேகரித்ததினால்
நானே இவ்வுலகின் அமைதி தூதுவன் அவள் புன்னகைகளை சேமித்ததனால்
நானே இவ்வுலகில் எவரையும் விட அதிர்ஷ்டசாலி அவள் அன்பை பெற்றதனால் ....
அவளே என் உலகம்
அவளே என் இதயத் துடிப்பு
அவளே என் எல்லாம்
அவளே என்
அம்மா !