முதுமைப்பட்டு

சோலியென்று மெனக்கெட்டு புழுவெடுத்து
==சூசகமாய் கூட்டிலிட்டு காவல்காத்து
ஆலிப்பின்றி பூச்சாய்வர பாடுபட்டு
==அதுஉமிழும் திரவத்தில் ஈர்க்கப்பட்டு
வாலிபத்துக் காலந்தொட்டு பட்டுப்பூச்சி
==வளர்த்தெடுக்க ஆசைப்பட்டு பழக்கப்பட்டு
தாலிகட்டி வந்தபின்னும் தொடரப்பட்டு
==தனிமரமாய் ஆனபின்னும் துணையாய்பட்டு

விட்டுப்போன கணவனாலே வெறுக்கப்பட்டு
==வீதியிலே அனாதைபோல விடவேபட்டு
பட்டுப்போன வாழ்க்கைதனை மீட்கப்பட்டு
==பக்குவமாய் முன்னேற்றம் கொடுக்கப்பட்டு
கட்டுப்பாடாய் வாழக் கை கொடுக்கப்பட்டு
==கண்ணியமே நெஞ்சினிலே உணர்த்தப்பட்டு
நட்டுவைத்த நம்பிக்கை உறுதிப்பட்டு
==நட்சத்திரம் போலமின்னும் முதுமைபட்டு.
*மெய்யன் நடராஜ்

நன்றி .படம் வல்லமை

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (2-Jun-15, 2:04 am)
பார்வை : 85

மேலே