கவிதைக் குருதி..

உன் கண்விழிக் கருமையின் கீழே காத்திருக்கும்
சிறு கண்ணீர்த்துளி நான்.
விழுவதும், விழிகளில் மீள்வதும் உன் பொறுப்பு.
கவிதைகள் சொல்லிக் கண் பார்த்திருப்பதும்
கண்ணீர் விழுங்கி வான்நோக்கியிருப்பதும்
காதலில் இயல்புதானெனினும்
காத்திருப்பு பதைக்க வைக்கிறது.
உறைவதா? மறைவதா?
உணர்வுகளின் வெப்பத்தில் கரைந்தொழிவதா?
சொல்.
காலக் கழிவுகளில் எஞ்சி விட்ட நினைவலைகளைக்
கணம்தோறும் சீர்தூக்கிப் பார்க்கிறேன்.
இமைகள் துடிக்க, இதயம் வலிக்க
உனக்காக சொரிந்தது கவிதைக் குருதி..