மழைபொழியும் கொண்டல் முவ

நந்தமிழில் நிறைந்திருக்கும் வளமை எல்லாம்
நெஞ்சினிலே சேர்ந்திருந்த புலமை ! யானும்
என்தலைவன் எனப்போற்றும் தலைமை ! மேனி
எந்நாளும் காட்டிவிடும் எளிமை ! நூல்கள்
தந்துவிடும் துடிப்பினிலே இளமை ! கற்றோர்
தாம்மகிழ்ந்தே ஏத்துகின்ற திறமை ! கொண்ட
சிந்தையினில் பூமடந்தைப் பொறுமை ! மு.வ
செப்பிவிட்ட தத்துவங்கள் அருமை யன்றோ !

கரித்துண்டாய் இல்லாமல் தங்கத் துண்டாய்
காட்டிட்டார் வாணாளில் ஒளியை ! மாந்தர்
நெறிகொண்டு வாழ்ந்திடவே எடுத்துக் கூறி
நீக்கிட்டார் தமிழினத்தின் இழிவை ! கொண்ட
உறவினர்கள் எல்லோர்க்கும் நூலின் மூலம்
உணர்த்திட்டார் விளக்கமென அறிவை ! சொந்தத்
திறமையினால் மேன்மைநிரை மு.வ தன்னை
தமிழகமும் பெற்றதனால் பெருமை யன்றோ !

சொல்கின்ற சொல்லினிலே சுவைக்குள் ஓமல்
சொல்லுவதில் வானொளிரும் திங்கள் ! கற்றோர்
கொள்கின்ற முறைமையிலே எழுதி தன்மைக்
குறைவின்றி வீசுவதில் தென்றல் ! நெஞ்சை
வெல்கின்ற தன்மையிலே பேசி என்றும்
விளங்கிவரும் பொதிகைதரும் மன்றல் ! நாமும்
செல்கின்ற பாதையினை அமைத்த மு.வ
சீர்திருத்த மழைபொழியும் கொண்டல் அன்றோ !

எழுதியவர் : இராம்பாக்கம்.கவிஞர்.தன.கன (1-Nov-15, 5:29 pm)
சேர்த்தது : தமிழன் விஜய்
பார்வை : 67

மேலே