சூரிய தாகம்
சூரிய தாகம் !
கவிதை by: பூ.சுப்ரமணியன்
ஏரி குளம் கிணற்றுநீர்
வாரிக் குடித்த பின்னும்
சூரியனே உன் தாகம்
தணியவில்லையா ?
ஏழையின் நரம்புபோல்
ஈரம் காணாத நிலம்
வெடிப்பு கண்ட பின்னும்
சூரியனே உன் தாகம்
தணியவில்லையா ?
கங்கைநீர் சுமந்து செல்லும்
மங்கையர் குடம் கூட
தண்ணீரின்றி ஆடுவதை
கண்ணால் கண்டபின்னும்
சூரியனே உன் தாகம்
தணியவில்லையா ?
தண்ணீர் தாகம் தணிக்க
காட்டில் சுற்றித் திரியும்
யானைகள் மான்கள்
வீட்டினைச் சுற்றி சுற்றி
சட்டி பானை உருட்டுவதை
எட்டிப் பார்த்த பின்னும்
சூரியனே உன் தாகம்
தணியவில்லையா ?
சூரியனே உன் தாகம்
தணிக்க குறைய
விண்ணிலே காட்டு
மண்ணிலே காட்டாதே !
விண்ணிலே
கருமேகங்களை கூட்டி
உயிர்கள் தாகம் தணிக்க
ஏரி குளம் நீரால் நிரப்பு !!