கேள்விகள் பலவிதம்

கேள்விகள் பலவிதம் !
கவிதை by : பூ.சுப்ரமணியன்
சிலை
செதுக்குவது கலையெனில்
கேள்வி கேட்பதும்
கலைதான்
மனிதனின் மனதுக்குள்
மறுபடியும் மறுபடியும்
தோன்றுவது கேள்விகள் !
சிறுவன் கேள்வியில்
துடிப்பு இருக்கும்
நடிப்பு இருக்காது
பட்டென்று கேள்வி
கேட்கும் பயமில்லாமல் .
இளைஞர்கேள்வியில்
இளங்கன்று பயமறியாது
கேலி கிண்டல்
நினைத்துப் பார்த்தால்
ஆயிரம் அர்த்தம் இருக்கும்
இளங்கன்று பயமறியாது !
பெரியவர் கேள்வியில்
பந்தம் சொந்தம்
ஒட்டி உறவாடும்
எண்ணிப் பார்த்தால்
வாழ்வியல் இருக்கும்
பெண்ணின் கேள்வியில்
மென்மை விளையாடும்
தாய்மை கொஞ்சும்
காதல் உறவாடும்
பொறுமை பூக்கும் !
முதியவர் கேள்வியில்
முதிர்ச்சி தெரியும்
அனுபவம் அசைபோடும்
நினைத்துப் பார்த்தால்
மனிதநேயம் இருக்கும் !
பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை