தொடரும் கதை

தொடரும் கதை

சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தேன். அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. வருவோரின், போவோரின் சலசலப்பு அதிகமாக இருந்தது. காலை வெயில் கொடுமை வேறு அதிகமாக இருந்ததால் நடந்து வந்த களைப்பு அதிகமாக சோர்வு அடைய வைத்தது. நான் பார்க்க வேண்டிய கிளார்க் மட்டும் இன்னும் வரவில்லை. அவர் உட்கார்ந்திருக்கும் டேபிளையே பார்த்து பார்த்து எனக்கு போரடித்து விட்டது. இதோடு நான்கைந்து முறை வந்து விட்டேன்.ஒரு விண்ணப்பம் பெறுவதற்கு இழுத்தடிக்கிறார்கள்.
சின்ன வேலைதான் என்னுடைய பென்சன் புத்தகத்தை சேலத்திலிருந்து கோவைக்கு மாற்றவேண்டும். சேலத்தில் கொடுத்து ஆறு மாதமாகிறது. இன்னும் கோவைக்கு வந்து சேரவில்லை. பென்சன் புத்தகம் கொடுக்கும்போது ஒரு மாதத்தில் ஆகி விடும் என்றார்கள்.ஆறு மாதமாகிறது.இது வரை தகவலே இல்லை..அதற்குத்தான் ஒரு விண்ணப்பம் கொடுக்கலாம் என்றால் அதை இப்படி எழுதிக்கொடு, அப்படி எழுதிக்கொடு என்று இழுத்தடிக்கிறார்கள். இன்று என்ன ஆனாலும் சரி வேலையை முடிக்காமல் போவதில்லை என்று அந்த சோர்விலும் உறுதி எடுத்துக்கொண்டேன்.
ஒரு வழியாக அந்த கிளார்க் யாருடனோ சிரித்துக்கொண்டு வந்தவர் டேபிள் அருகில் வந்ததும் வலது கையால் மெல்ல நாற்காலியை துடைத்து விட்டு உட்கார்ந்தார்.தள்ளி உட்கார்ந்து அவரையே பார்த்துக்கொண்டிருந்த நான் மிக வேகமாக அவர் அருகில் சென்று வணக்கம் சொன்னேன். என் வணக்கத்தை கண்டு கொண்டதாக காட்டிக் கொள்ளவேயில்லை. ம்..என்ன வேணும் உங்களுக்கு? சார் நேத்து கூட வந்தேனே என்னுடைய பென்சன் புத்தகம் விசயமா இழுத்தேன். ஓ..அதான் அப்ளிகேசன் கொடுத்திட்டீங்களே ஒரு வாரத்தில வந்திடும் என்றார். காலையில் சாப்பிடாமல் வந்த்தில் பசி வேறு என் கோபத்தை தூண்டியது. சார் நேத்து அப்ளிகேசனே கொடுக்கலை, நீங்கதான் அதைய மாத்திட்டு வா அப்படீன்னு திருப்பி அனுப்பிட்டீங்க, என்று சொல்லி என் விண்ணப்பத்தை நீட்டினேன்.கொண்டாங்க என்று அதை வாங்கியவர் படித்து பார்க்காமலே டேபிளின் டிராயரில் போட்டுக்கொண்டு இன்னும் ஒரு வாரத்துல வந்திடும் என்று அதே வார்த்தைகளை இயந்திரமாய் சொன்னார். எனக்கு அதற்கு மேல் என்ன செய்வதென்றே தெரியவில்லை. சார் கொஞ்சம் சீக்கிரமா செய்து கொடுத்தால் நல்லா இருக்கும்.மென்று விழுங்கினேன். பார்க்கலாம் என்றவாறு ஏதோ பைல் பார்ப்பது போல் தலையை குனிந்து கொண்டார்.
ஆயாச பெருமூச்சுடன் என் தலை விதியை நொந்தவாறு வெளியே வந்தேன். இந்த ஆறு மாத கால பென்சன் நின்று போனதில் கையிருப்பு கரைந்து போயிற்று. வீட்டில் நானும் மனைவியும்தான் என்றாலும், பெண்கள் இருவரையும் உள்ளூரிலே கட்டி கொடுத்துள்ளதால் ஒவ்வொரு ஞாயிறும் குழந்தைகளுடன் வருவார்கள். அவர்களை கவனிப்பதில் செலவுகள் அதிகமாகிவிடும்.

அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது எதிரில் நண்பர் வேணுகோபால் வந்து கொண்டிருந்தார். என்னுடன் சேலத்தில் ஒன்றாக பணியாற்றியவர். என்னை விட பன்னிரெண்டு வயது இளையவர். நான் ஓய்வு பெற்று ஏழு வருடங்கள் ஆகி விட்டன. அப்படியானால் வேணுகோபாலுக்கு இன்னும் ஐந்து வருடம் சர்வீஸ் இருக்கிறது. ஆனால் அவர் எப்படி இங்கு? யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவர் சார் என்று என் கையை பிடித்துக்கொண்டு வாஞ்சையுடன் எப்படி இருக்கீங்க சார் உங்களை பார்த்து எத்தனை வருசம் ஆச்சு? நான் கோயமுத்தூருக்கு வந்து மூணு வருசமாச்சு, நீங்க எங்க சார் இந்த பக்கம்? மூச்சு விடாமல் பேசினார். நான் ரிட்டையர்டு ஆன பின்னால் பொண்ணுங்களை கோயமுத்தூருல கட்டி கொடுத்துட்டேன். அப்புறம் நான் மட்டும் அங்க என்ன பண்ணறேன்? அதான் இங்க வந்துட்டேன், என்றவன் என் பென்சன் புத்தகம் பற்றி மெதுவாக வேணுகோபாலிடம் சொன்னேன்.அந்த விசயமெல்லாம் ரங்கசாமிதான் பார்ப்பார், அவரை பார்த்தீங்களா? பார்த்தேன் ஆனா ரொம்ப இழுக்கறாரு. எனக்கு அவரை அறிமுகமுமில்லை என்றேன். நீங்க என் கூட வாங்க என்று என்னை விரு விரு வென அலுவலகத்துக்குள் அழைத்து சென்று நான் விண்ணப்பம் கொடுத்த அதே கிளார்க்கிடம் சென்று ரங்கசாமி இவர் எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவர், அதுவுமில்லாம நம்ம டிபார்ட்மென்ட் வொர்க்கர், பாவம் அவரை ஏன் இழுத்தடிக்கிறாய்? அவருக்கு சீக்கிரம் முடிச்சு கொடு என்றார். ரங்கசாமி சீட்டை விட்டு எழுந்து சார் உங்களுக்கு தெரிஞ்சவரா? முதன் முறையாக சிநேகமாக சிரித்து நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க, இன்னும் ஒரு வாரத்துல உங்களுக்கு ஏற்பாடு பண்ணிடலாம். கவலைப்படாமல் போங்க சார் என்றார்.
நான் மகிழ்ச்சியுடன் தலை அசைத்து வேணுகோபாலுடன் வெளியே வந்து வேணுகோபால் “வா காப்பி” சாப்பிடலாம் என அழைத்தேன். வேணு கோபால் வேண்டாம் என்று சொல்லி பிறகு பார்ப்பதாக தோளை தட்டி விடை பெற்று சென்றார். நானும் நிம்மதியுடன் கிளம்பும்போது அருகில் இருந்து பேச்சுக்குரல் என் காதில் விழுந்தது.
இதோ போறானே இந்த ஆளுகிட்டே சேலத்துல இருக்கும்போது ஒரு சாதாரண சர்டிபிகேட் வேணுமின்னா கூட நாயா அலைய விட்டு கடைசியில காசு வாங்கிட்டுதான் செய்வான். இப்ப இவன் அனுபவிக்கிறான் !.
இவ் வார்த்தைகள் எனக்குத்தான் ! ஆனால் உறைக்கவில்லை. எல்லாம் பழக்கம்தான்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (16-Nov-17, 10:51 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 183

மேலே