எப்படித்தூங்கினேன்

எப்படித்தூங்கினேன்?
====================================ருத்ரா.

என்னடா
இப்படி படுத்துகிறாய்.
தூங்கப்போகும்
இமைக்குள்
வர்ண மத்தாப்புகளின்
எரிமலை லாவா நீ.

கொடும்பனியில்
விறைத்த கோடுகளாய்
செங்குத்தாய் நிற்கும்
அந்த
மௌன இரைச்சல்களின்
பிழம்பாய்
என்னைப்
பிழிந்து கொண்டிருக்கும்
நயாகரா நீ.

எப்படி எப்படி
என் துடிப்புகளை
யாழ்மீட்டியபோதும்
அந்த பண்களிலும் நீ
அந்த விரல்களிலும் நீ.

தூக்க மாத்திரை
என் கையில்.
தூக்கத்தை விரட்டும்
மாத்திரையாய் நீ.

"என்ன? தூங்கவில்லையா?
கொசுக்கடியா?"
அம்மா கேட்டாள்.
சொல்லி வைப்போம் என்று
"ஆம்" என்றேன்

அந்த ஆமைச்சுருளை
அருகில்
வைத்துவிட்டுபோய்விட்டாள்.

அந்த நாற்றம்
எல்லாவற்றையும்
அடித்துக்கொண்டு
போய்விட்டது.

எப்படித்தூங்கினேன்?
எப்படியோ தூங்கினேன்.
உன் கனவுகளின்
"கோக்கூன்" கூட்டில்
அணைவாய்!

=============================================

எழுதியவர் : ருத்ரா (7-Jan-18, 7:40 pm)
பார்வை : 122

மேலே