திருமண வாழ்த்து

"திருமண வாழ்த்து"
அன்பைப் பரிமாறி அரும்பசியாற்றிடுக
ஆணவத்தோலுரித்து அப்பக்கம்வீசிடுக
இன்பத்தேன்குடித்துஇல்லறம்
சுவைத்திடுக
ஈடில்லா அன்றில்போல் இணைந்தே வாழ்ந்திடுக
உண்மை நேசத்தை உள்ளத்தில் விளைத்திடுக
ஊசியில் நூலாகி உறவுகளை இணைத்திடுக
எண்ணப்பூங்காவில் இன்பப்பூ பூத்திடுக
ஏணியாய் இருவருமே மாறி ஏற்றம் கண்டிடுக
ஐயம் களைந்தெரிந்து அறிவைச் செலுத்திடுக
ஒருமித்த கருத்தாலே உலகை வென்றிடுக
ஓடி உழைத்தாலும் ஒருகூட்டில் சேர்ந்திடுக
ஔடதமே இருவரும்தான் மனக்காயம்ஆற்றிடுக..!!
அவன்பாதி அவள்பாதி அனைத்திலுமாகி
சிவன்பாதியமைந்திட்ட
பார்வதி போலே
பூலோகம் போற்றிட
புகழ்மாலை சூட்டிட
பதினாறும் பெற்று
பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறேன்

எழுதியவர் : பெ.அசோகன் (1-Feb-19, 9:43 pm)
சேர்த்தது : கவிஞர் பெஅசோகன்
பார்வை : 58

மேலே