ஆனாலும் எனை விட்டு போயேவிட்டாய்

ஆனாலும் எனை விட்டு போயேவிட்டாய்

என் மன வெளியில்
சிதறிய சருகுகளாய் - உன்
நினைவுகள்

உன் மென்குரல் கேட்கும்போது மட்டும்
ஏனோ சருகுகளுக்கு
சிறகு முளைத்து விடுகிறது

நாள் ஒவொன்றும் மற்றொன்றின் மீதேறி
நாற்பது வருட திரள் கொண்டு
சிரிக்கிறது எனை பார்த்து

உன்பால் கொண்ட என் அன்போ
புத்தகத்திற்குள் மறைத்து வைத்து பார்க்கும்
மயில் இறகுபோல
எடுத்து பார்த்து எடுத்துப்பார்த்தே
இளமை முடிந்தது

ஓராயிரம் உன் நினைவுகளால்
கட்டுண்ட அன்பின் மாளிகையில்
ஒருமுறைகூட உன்னை
அழைக்கமுடியாது ஆண்மையற்றுப்போனேன்

என் இதய குளத்திற்குள்
நீந்தும் உன் நினைவுகளிலிருந்து
ஒரு வரி எடுத்து உன்னிடம்
கூறியிருந்தால் மலரே
நீ இன்று என் மடியில் மலர்ந்திருப்பாய்

நல்லவேளை இதயத்தை
இறைவன் உள்ளே வைத்துவிட்டான்
இல்லையேல் உன் நினைவுகள்
குத்தி கிழிப்பதால் வரும் இரத்தம்
கண்டு நீ விக்கித்து போயிருப்பாய்

ஆனாலும் எனை விட்டு போயேவிட்டாய்

எழுதியவர் : இளவல் (3-Jul-19, 4:57 pm)
சேர்த்தது : இளவல்
பார்வை : 130

மேலே