விழித்தெழுவோம்
ரயில் நிலையத்தில்
இறந்து கிடக்கும்
தாயின் மார்பில்
பால் தேடுகிறது
பசியில் துடிக்கும்
பச்சிளங்குழந்தை
மருந்துகளுக்கும்
மருத்துவர்களுக்கும்
கொடுக்கக்
கட்டணமில்லாமல்
கட்டிலின் பிடியில்
கட்டப்படும் வயோதிகர்
அகால மரணமடைந்த
அருமை மனைவியை
கொண்டு செல்ல
அமரர் ஊர்தி இல்லாமல்
ஐம்பது மைல்கள்
சடலத்தைத் தோளில்
சுமந்து செல்லும்
ஒரு சாமானியன்
பிறர் வாழ்விற்காக
நிலத்தில் கால் வைத்து
உழவு செய்து - பிறகு
தான் வாழ கதியில்லாமல்
பூச்சிமருந்தைக் குடித்து - அதே
நிலத்தில் புதையுண்டு போகும்
அப்பாவி விவசாயிகள்
கோடிக்கணக்கில்
கடன் பெற்றுக் கட்டாதவர்கள்
கள்ளத்தனமாய்ச் செல்ல
விமானங்கள் காத்திருக்கையில்
உழைத்து ஓடாய்த் தேய்ந்த
புலம்பெயர் தொழிலாளர்களின்
பாதங்கள் மட்டும்
ஆயிரம் மைல்களுக்கு மேல்
நடைபயண நரகம்
வெள்ளைநிறப் பாலில்
விஷம் கலப்பதுபோல
மனிதர்களின் மனதில்
மதவாதம் விதைக்கப்பட்டு
மனிதாபிமானமோ
மரணத்தின் விளிம்பில்
தனியார் மருத்துவ மனைகள்
அபரிமிதமான கட்டணங்கள் மூலமும்
தனியார் கல்விக்கூடங்கள்
ஆன்லைன் வகுப்புகள் மூலமும்
பணக்காரர்களின் ஆஸ்தியையும்
பாமரர்களின் அஸ்தியையும்
ஒருசேரக் கரைக்கின்றன
மகனும், தந்தையும்- சில
சாத்தான்களால்
மனிதத்தன்மையின்றி
கொல்லப்பட்டதால்
சாத்தான்குளம்
கண்ணீர்குளமானது
கொரோனோவின்
கோரப்பிடியில் சிக்கி
கொத்துக்கொத்தாய்
கொள்ளை போகும்
மனித உயிர்கள்
இத்தனை துன்பங்களுக்கும்
நிவாரணம் கேட்டு - அரசிடம்
கையேந்திச் சென்றால்
கைகளைத் தட்டிக்கொண்டே
கைவிளக்கேந்தி நில்லுங்கள் என்று
கைநழுவிச் செல்கிறார்கள்
ஜனநாயகம்
பணநாயகமானால்
பரவாயில்லையென்று
படுத்திருந்தால் - அதுவே
பிணநாயகமாகிவிடும்
பிழைத்திருக்க வேண்டுமென்றால்
விழித்தெழுங்கள்