வககன்னியப்பன் குறட்பாக்கள்

உலகாளும் ஈசனுக்கும் உண்மைக்கும் என்றும்
தலைவணங்கல் நன்றெனச் சாற்று! 11

வாரி பெருக்கி வளம்பல பெற்றுநீ
மாரியாய்ப் பெய்க மகிழ்ந்து! 12

கன்னிப் பருவத்தின் காரிகையைக் கண்டறிந்(து)
என்மனத்தில் வைத்தேன் இசைந்து! 13

பெண்ணவளைக் கண்டவுடன் பின்னே உவகையொடு
கொண்டாடிச் சென்றேன் குளிர்ந்து! 14

அறிவுமலர்ச் சோலையில் அன்னம்போற் பெண்ணின்
குறிப்பறிந்து காப்பேன் குளிர்ந்து! 15

கண்களுடன் கண்கலந்து கற்கண்டாய்ப் பெற்றிடுவோம்
வண்ணத் தமிழான வாழ்வு! 16

சோலைதனில் கண்டவுடன் சொக்கிக் கனிவுடனே
மாலையிட்டேன் நெஞ்சில் மகிழ்ந்து! 17

வானும் நிலவும்போல் வாழ்ந்திடுவோம் இவ்வுலகில்
தேனுண்ட வண்டாய்த் திளைத்து! 18

நல்ல மனைவியும் நல்ல குடும்பமும்
இல்லற வாழ்க்கைக்(கு) இனிது! 19

சொந்தங்கள் கொண்டாடச் சொர்க்கத்தைக் கண்டதுபோல்
பந்தமுடன் வாழ்வோம் பரிந்து! 20

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Oct-20, 8:37 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே