இனியென்ன விதி செய்வீர் - கே-எஸ்-கலை

மெல்ல மெல்ல
எழுந்துக் கொள்ள முயன்றது
அது....

சட்டென யாரோ
தள்ளிவிட்டதைப் போலவொரு
நிகழ்ச்சி...
மீண்டும்
நலிந்து விழுந்தது தரையில்...!

வெடித்த நிலத்தின்
பள்ளங்களுக்குள் இருந்து
ஏதோ அழைப்பதாய்
உணர்த்திக் கொண்டிருந்தது
ஒரு வறண்ட அசரீரி....

புழுதியை
துரத்திக் கொண்டு
ஓடி வரும்
மாமிச வாடையை
விலக்கிவிட முடியாது
உறிஞ்சிக் கொண்டிருந்தது
காற்று....!

மாறுவேடம் பூண்ட நெருப்பு
முலைப்பாலாய் தீயூட்ட
மெதுமெதுவாய்
சப்பிக்கொண்டிருந்தது
ஆற்றின் அடையாளங்கள்...

இனி எழ
வாய்ப்பின்றிப் போன
அது
உறுதியாய் விழ
தாங்கிப் பிடித்தது அந்த
கட்டாந்தரை...!

எந்த ஆர்ப்பாட்டமும்
அலட்டலும் இல்லாது
அந்த உயிரை எடுத்து
மெது மெதுவாய்
பசியாறிக் கொன்டது
பட்டினி !

எழுதியவர் : கே.எஸ்.கலை (27-Nov-20, 6:00 pm)
பார்வை : 155

மேலே