அடுத்தடுத்துச் சென்றாங்கு அடைந்து களைவினை யென்பரே – அறநெறிச்சாரம் 184
நேரிசை வெண்பா
கொடுப்பான் பசைசார்ந்து கொள்வான் குணத்தில்
கொடுக்கப் படுதல் அமையின் - அடுத்தடுத்துச்
சென்றாங் கடைந்து களைவினை யென்பரே
வென்றார் விளங்க விரித்து 184
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
ஞானாசிரியன் அன்போடு தன்னையடைந்த மாணாக்கனது திறமைக்கேற்ப உபதேசிக்க வல்லவனாதல் அமையின் பலமுறை அவன்பாற் சென்று அவன் கூறும் உறுதிமொழிகளைக் கேட்டு பிறவிக்குக் காரணமாய வினைகளை நீக்குமின்’ எனப்புலன்களை வென்ற முனிவர் யாவரும் உணருமாறு விரித்துக் கூறுவர்.
குறிப்பு:
‘அடுத்தடுத்துச்’ சென்றாங் கடைந்து களைவினை என்றதன் குறிப்பால், கொடுப்பான் கொள்வான் என்பன ஆசிரியனையும் மாணாக்கனையும் முறையே உணர்த்தி நின்றன.