மலராமல் மண்ணில் விழும்

புழுதி காற்றில்
புகுந்து பறக்கிறது
உழுது பிழைத்தவர்
உயிரான விவசாயம் !
கரம்பாய் கிடந்தவை
கட்டடங்கள் ஆகிறது !
நாளும் உழைத்தவன்
நடுவீதியில் அழுகிறான் !
வரப்புகள் மாறுகிறது
வயல்கள் மறைகிறது
வாய்க்கால் கலைகிறது
கதிர்கள் தவிடாகிறது !
மனங்கள் உடைகிறது
மானம் பறிபோகிறது
உயிரற்ற சடலமாகிறது
உழவர்களின் நிலையிது !
நிலங்களை காணாதவன்
வளமுடன் வாழ்கிறான்
விவசாயம் செய்யாதவன்
வீராப்புடன் நிற்கிறான் !
விளை நிலங்கள் வீழ்ந்து
பல மாடிகள் எழுகின்றன
காத்தவன் கண்ணீரில்
கட்டியவன் தண்ணீரில் !
இன்றைய நிலையிதுவே
நாளைய நிலை எதுவோ !
உண்பதற்கு அரிசியிராது
திண்பதற்கு உணவிராது !
வளரும் தலைமுறையும்
மலராமல் மண்ணில் விழும் !
பழனி குமார்
28.04.2023