கருணை பொங்கும் கடவுள் முகம்
விடுகின்ற மூச்சிக் காற்று
விழிகளுக்குத் தெரிவதில்லை....!
சுவாசத்தை நம்புகிறோம்
சுகமாக உணர்கிறோம் ........!
கருணை பொங்கும் கடவுள் முகம்
கண்களுக்குத் தெரிவதில்லை....!
ஆண்டவனை நம்ப மறுக்கிறோம்
அவன் யாரென கேள்வி கேட்கிறோம்...!
கண்ணால் கண்டுதான் நீ
கடவுளை நம்புவேன் என்றால்
கண்ணா ! நீ விடும் மூச்சி பொய்யா ?
கவனியடா நான் சொல்வதை !
இறைவன் இருக்கிறானடா - உன்
இதய ரத்த ஓட்டமாய் சிரித்தபடி !
நாடித் துடிப்பே அவன்
நடக்கின்ற ஒசையடா - உன்
நம்பிக்கை என்பதே அவன் தந்த வரமடா !
அன்பாக இருந்து பார்
அவனது தேக வாசம் புரிய வரும்
அடக்கமாக இருந்து பார்
அவன் தாள் பணிவதாய் தெரிய வரும்
துணிவுடன் இருந்து பார்
தூயவன் அவன் வீரம் அறிய வரும்
தூரமாய் ஆசையை வைத்துப்பார்
துன்பத்தை அவன் அகற்றுகையில் தெளிவு வரும்...!
இன்னும் சொல்லவா ? என்
இனிய நண்பனே !
இறைவன் இருப்பதை நீ
இப்போதே புரிந்து கொள்ள…..!
உனக்குப் பிடித்ததாய்
அன்று அவன் இருந்தான்
குழந்தை பருவத்தில் நீ
குதூகலமாய் தின்றாயே
அந்த பஞ்சு மிட்டாயாய்
உனக்குள் கரைந்தது
உண்மையில் இறைவனே !
உனக்குப் பிடிப்பதாய்
அவன் இன்று இருக்கிறான்
இந்த இளமைப் பருவத்தில்
இனிய காதலில் திளைக்கிறாயே
இன்பக் காதல் உணர்வுகளில்
இணைந்து இருப்பது இறைவனே !
உனக்குப் பிடிக்கப் போவதாய்
அவன் என்றும் இருப்பான்
ஆசை துறந்து நீ ஒருநாள்
ஆனந்தத்தையும் துக்கத்தையும்
நடுநிலையில் பார்ப்பாயே அப்போது
நிம்மதி என்ற உரு எடுத்து
நிலைத்து நிற்பான் என் இறைவன்
என்ன நண்பனே ! இப்போது சொல்லடா
இறைவனை புரிந்து கொண்டாயல்லவா ?
இப்போது எனக்கு
இறைவனை வணங்க வேண்டுமடா
ஒரு நிமிடம் நில்லு கண்ணா !
உன் காலில் விழுந்து எழுகிறேன் !