நெகிழி
 
            	    
                ------ நெகிழி ------- 
நெகிழி என்பது பிளாஸ்டிக் என்பதன் தமிழாக்கம் 
நேர்பட சொன்னால் - அது 
நம் மண்ணுக்கு நிறைய தீமையை உருவாக்கும்.
முதுமை எய்திட்டால் 
பூமித்தாய்.
நரைத்த முடிகளாய்
நாடெங்கும் 
பாலிதீன் பைகள்
முளைத்திருக்கிறது.
நீ தூக்கிச் செல்லும் 
பாலிதீன் பைகள் 
தேசத்தின் தூக்கு கயிறு...
ஆய்வு சொல்லதுப்பா
நெகிழி உபயோகித்தால் 
மீன்கள் முதல் 
மான்கள் வரை 
மாண்டுப் போகும்.
ஈக்கள் முதல் 
பூக்கள் வரை
மலடாகும்.
அத்தனை நதியின் காம்புகளும் 
அதிவிரைவில் வற்றிவிடுமாம்.
புத்தனைப்போல் வாழ்ந்தாலும் 
புற்றுநோய் முற்றிவிடுமாம்.
தீவனமில்லா ஏழை கால்நடைகள் 
தினம் தின்றுமடிகிறது 
பாலிதீன் பைகளை
காகிதமென்று எண்ணி....
நெகிழி நம் தேசத்தின் 
வற்றா மடுகளில் ரத்தம் 
உறிஞ்சுமொரு உன்னி.
கால்நடை இறப்புக்கும் 
சாக்கடை அடைப்புக்கும் 
காரணமிந்த நெகிழி 
சுகாதார கேடுக்கும் 
சூதறியா நாடுக்கும் 
இதுவே சகுனி. 
பாலிதீன் பைகள் 
பாவை நம் மண்ணோடு 
பலவந்தமாக 
பாலியல் வல்லுறவு கொள்கிறதே!
தமிழ் மக்களே நாமிதை 
தடுக்க வேண்டாமா ?
மூச்சு திணறுதப்பா பூமிக்கு - அவள்
முந்தியில் பிறந்த
சந்ததிகள் நாமொரு 
முடிவெடுக்க வேண்டாமா?
பொய்யும் புரட்டும் பேசும் 
போலி உதட்டுக்கு 
எதற்க்கப்பா லிப்ஸ்டிக்?
பெய்யும் மழையின்றி 
தவிக்கும் நமக்கு 
எதற்க்கப்பா பிளாஸ்டிக்?
பெண்சிசு கொலையைப் போல
மன்னிக்க இயலா 
பெரிய குற்றம் 
மண்சிசு கொலை.
ஊருக்கு விழிப்புணர்வு 
ஊட்ட 
ஊர் ஊராக 
ஊர்வலம் வேண்டாம் 
போலியாக 
பேரணி வேண்டாம். 
நானிலம் நலம் பெற 
நடைமுறை வாழ்வில் 
நானினி நெகிழியை 
பயன்படுத்த மாட்டேன் 
டீக்கடையில் தந்தாலும் 
நெகிழி குவளையில் 
இனிக்கும் தேநீர் 
இனியும் அருந்த மாட்டேன். 
இப்படி ஒவ்வொருவரும் 
உறுதி கொள்வோம். -இதை 
தனிமனித கொள்கையில் 
இணைத்து கொள்வோம்.
முற்றிலுமாக பிளாஸ்டிக்கை 
முடக்க பழக வேண்டும்.
நாளை நம் குழந்தைகள் வாழ 
உலகம் வேண்டும்.
பாலிதீன் பை - எமனின் 
பாசக் கயிறு போல 
தவிர்த்திடுங்கள் தோழா 
இனியெம் தலைமுறைகள் 
உயிர் வாழ.
----- தமிழ்தாசன்-----
	    
                
