செத்த சொப்பனம்-கே.எஸ்.கலை

அத்த பெத்த பெரிய மச்சான்
ஆசா பாசம் நெறைய வச்சி !
வயசு புள்ள மனச தச்சான்
வார்த்தையால வசியம் வச்சி !

கொஞ்சி கொஞ்சி பேசி என்ன
இஞ்சி இஞ்சா தின்னுப்புட்டான்
நஞ்சி போல வார்த்த சொல்லி
நெஞ்சொடச்சி போயுப்புட்டான் !

காதலுன்னு வேஷம் போட்டு
கண்ணு தண்ணி சிந்த வச்சான் !
மனசொடச்சி அழுக வச்சி
மாறிப்புட்டான் சொந்த மச்சான் !

படிச்ச தொழில் வேணுமுன்னு
பட்டணத்துப் பக்கம் போயி !
படிச்ச புள்ளய கட்டிக்கிட்டான்
புடிச்ச புள்ளய துடிக்கவச்சி !

கண்ட கனவு பலிக்கவில்ல
தின்ன சோறு செமிக்கிதில்ல !
கடலப் போல பெருத்த ஆச
ஒடல கொளுத்தி திங்குதிங்க !

படிச்சதெல்லாம் மறந்து போச்சி
புடிச்சதெல்லாம் வெறுத்து போச்சி !
பொஸ்தகத்துல தூங்குன நான்
மெத்தயிலயும் முழிச்சிருக்கேன் !

தவிக்கிறப்போ அவன எண்ணி
தலகாணி நனைக்கும் தண்ணி !
செஞ்ச பாவம் என்னமோன்னு
நெஞ்சடைச்சி துடிக்கும் கன்னி !

கருப்பு பொட்டு வச்சிக்கிட்டு
கலகலப்பா பறந்த சிட்டு
செவப்பு பொட்டு கனவுகெட்டு
வாழுரனே துடிச்சிக்கிட்டு !

மனசுக்குள்ள சொப்பனத்த
வளத்துபுட்ட வயசுப்புள்ள
சொப்பனத்த பொதச்சிப்புட்டு
நடப் பொணமா ஆகிபுட்டே(ன்) !

வெத வெதமா ஆசப் பட்டு
வாழுறே நா அவஸ்த்த பட்டு !
வெவஸ்தக் கெட்ட காதலால
போகுது ஏ வாழ்க்க பட்டு !

எழுதியவர் : கே.எஸ்.கலை (14-May-13, 9:21 am)
பார்வை : 282

மேலே