கிராமத்துக்கு போகலாமடி

பட்டுப்போன மனங்கள்தானடி கண்ணம்மா
பட்டணத்தில் என்ன இருக்குடி..?

கிராமத்துக்கு போகலாமடி கண்ணம்மா
கிணத்தடியில் இருக்கலாமடி..
அய்யனாரை பாக்கலாமடி கண்ணம்மா
அவரிடமே பேசலாமடி...

வயல்வரப்பில் நடக்கலாமடி கண்ணம்மா
வளைஞ்சு வளைஞ்சு ஓடலாமடி..
நாத்தெடுத்து இறங்கலாமடி கண்ணம்மா
நாணி கோணி நடலாமடி...

ஆத்துப்பக்கம் ஒதுங்கலாமடி கண்ணம்மா
ஆசை தீர குளிக்கலாமடி..
கரும்புதோட்டம் காணலாமடி கண்ணம்மா
கம்பு போல கடிக்கலாமடி..

மாமரத்தில் ஏறலாமடி கண்ணம்மா
மாறி மாறி இருக்கலாமடி..
மாங்காபறிச்சு தின்னலாமடி கண்ணம்மா
மாமன் கண்டா ஓடலாமடி..

ஆட்டுக்குட்டி தூக்கலாமடி கண்ணம்மா
அப்படியே அணைக்கலாமடி..
பால்பசுவை கறக்கலாமடி கண்ணம்மா
பக்கம் பார்த்து பிழியலாமடி..

பெட்டகோழி பொத்தலாமடி கண்ணம்மா
பெரிய முட்டை எடுக்கலாமடி...
ஊஞ்சகட்டி ஆடலாமடி கண்ணம்மா
ஊருக்குள்ளே அசத்தலாமடி..

மழபெஞ்சா நனையலாமடி கண்ணம்மா
மறஞ்சு நின்னு துடைக்கலாமடி..
குளக்கரையில் கூடலாமடி கண்ணம்மா
குனிந்து மீனு புடிக்கலாமடி..

பழையசோறு உண்ணலாமடி கண்ணம்மா
பலஊறுகாய ருசிக்கலாமடி...
கயறுகட்டில் கிடக்கலாமடி கண்ணம்மா
கட்டி புடிச்சி உறங்கலாமடி..!

நிழலும்கூட வேசம்தானடி சொல்லம்மா
நீ நிற்பதற்கும் காசுதானடி..!
பட்டுப்போன மனங்கள்தானடி சொல்லம்மா
பட்டணத்தில் என்ன இருக்குடி..?
-----------------நாஞ்சில் நசீர் ------------------------------------

எழுதியவர் : குமரி பையன் (24-Aug-13, 5:53 pm)
பார்வை : 468

மேலே