துணிந்து நில்

[26.10.2014 கோவை வானொலி இலக்கியச்சோலை நிகழ்ச்சியில் ஒலிபரப்பான கவிதைகளில் இதுவும் ஒன்று. இன்னொரு கவிதையான "இயற்கையைப் போற்றுதும்" ஏற்கெனவே இங்கு பதியப்பட்டது]
என்ன வாழ்க்கை இதுவென்று
அலுத்துவிட்டாய் என்றால் -நீ
இளைஞன் ஆனாலும் இயலாதவனாகிறாய்.
இனிமேல்தான் வாழ்க்கை உள்ளதென்று
உறுதிகொண்டால் - நீ
முதுமையிலும் இளைஞனாகி விடுவாய்.
சாதிக்கத் தவறிவிட்டால்
சுவாசமும் உனக்குச் சுமையாகும்
தோல்வியே உனக்கு மாலையிடும்.
சாதிக்கும் எண்ணத்தையே மறந்தால்
கண் சிமிட்டக் கூட கடினமாகும்
வாழ்வின் அர்த்தமும் தோல்வியாகும்.
சிறு புல்கூட மேல்நோக்கியே
வாள்போல் முளைத்து வருகிறது
எதிர்ப்புகளை தள்ளிவிட்டு வளர்கிறது.
வீரநடை போடவேண்டிய நீயோ
தலைகுனிந்து தடுமாறி நடக்கிறாய்
ஏமாற்றமே உனக்கு வாழ்வாகிறது.
சூழ்நிலைக் கைதியாகிவிட்டதாய்
கடந்த கால வாழ்வின் தோல்விகளுக்கு
சமாதானம் சொல்லிவந்தது போதும்.
சூளுரைத்து வெகுண்டெழுந்து பார்
சிந்தனையைக் கூர்படுத்தி நில்.
வாழ்க்கை வாழ்வதற்கென்று சொல் !
உன்முன் சவாலாகத் தோன்றியதெல்லாம்
உனக்கு சாமரம் வீசி நிற்கும்
வருங்கால வெற்றிக்கு வழியும் காட்டும். !