மண் பயனுற வேண்டும்- கவிதைப் போட்டி

மண் பயனுற வேண்டும்- கவிதை போட்டி

1) நெஞ்சுப் பொறுக்குதில்லையே
கொஞ்சும் அழகுத் தமிழ்மொழி
*****குதறி விடத்தான் கொலைவெறி
நஞ்சு கலந்து வருவதை
*****நன்க றிந்த நிலையினால்
நெஞ்சுப் பொறுக்கு தில்லையே
*****நேரமைத் திறனு மின்றியே
வஞ்சிக் குமிவர் பிழையினை
*****வளர விட்டக் கொடுமையே

அஞ்சி அஞ்சி வாழ்வதால்
*****அன்னைத் தமிழும் சாகுமே
கெஞ்சிக் கேட்டா லிவர்களின்
*****கொடுமை யின்னும் கூடுமே
பஞ்சில் வைத்த தீயினாய்
*****பாழாய்ப் போகும் தாய்மொழி
பிஞ்சு நாவுகள் சொல்லுமே
*****பிழையாய்த் தமிழைக் கொல்லுமே




2)
ஆதலினால் காதல் செய்வீர்

காதலியின் கரம்பற்றிக் காதலினை உணர்ந்தோரே
காதல் சுவைதன்னைக் காட்டிடுங்கள் காட்சியாய்;
காதல் மணம்தன்னைக் காட்டிடுங்கள் நுகர்ந்தவாறு;
காதல் வடிவத்தைக் காட்டிடுங்கள் கண்டதுபோல்;

”இல்லை; முடியாது” இதுவே விடையானால்
”இல்லை; காதலியுடன் இல்லை காதல்”
விண்டிடத் துணிவு உண்டா காதலர்காள்!
கண்டவர் விண்டிலர் கடவுளையும்; காதலையும்

தேனின் சுவையும்; தென்றலின் சுகமும்;
ஊனின் உணர்வும்; உயிரின் துடிப்பும்;
காண முடியாது காட்சியாய் உணர்வுகளை;
காண முடியாது காட்சியாய்க் கடவுளையும்..!!

ஊனாகி உணர்வாகி உயிருமாகிய காதல்போல்
நானாகி நீயாகி நாளும் தவறாது
ஆட்சி நடாத்தும் அவனில்லை என்றால்
காட்சிக்கு வராத காதலுணர்வும் பொய்யாமோ?

கண்ணுக்குள் எத்தனைவகைக் கண்ணீர் வழிகின்றன
பெண்ணுக்குள் எத்தனைவகைப் பேரின்பம் பொழிகின்றன
மூக்கு எத்தனைமணம் முகர்ந்து நுகர்கின்றன
நாக்கு எத்தனைமொழி நாளும் பகர்கின்றன

எழுதியவர் : கவியன்பன் கலாம் (1-Feb-15, 8:35 pm)
சேர்த்தது : கவியன்பன் கலாம்
பார்வை : 62

மேலே