இந்தக் கவிதையினாலாய பயன்

இந்தக் கவிதை
வார்த்தைகளின்
விடுகதையாக
இருக்கத் தேவையில்லை !

இந்தக் கவிதை
உங்கள்
புரட்சி யாகங்களுக்கு
வேள்வித்தீ
மூட்டத் தேவையில்லை !

இந்தக் கவிதை
இலக்கியத்தின்
பழைய மரபுகளை
அடித்துத் துவைத்து
துவம்சம்
செய்யத் தேவையில்லை !

இந்தக்கவிதை
கடவுளை
உங்கள் இருதயத்துக்கு
வெகு அருகாமையில்
அழைத்துவரத்
தேவையில்லை !

இந்தக் கவிதை
உங்கள் வாழ்வை
அப்படியே
180 டிகிரி
புரட்டிப் போடத் தேவையில்லை !

இந்தக் கவிதை
இந்தச் சமுதாயத்திற்கு
சவுக்கடி
செருப்படி
நாயடி
பேயடி
இத்யாதிகள்
கொடுக்கத் தேவையில்லை !

இந்தக் கவிதை
உங்களை அலேக்காகப்
பெயர்த்து
எடுத்துக்கொண்டுபோய்
ஏழாவது சொர்க்கத்தில்
கிடத்தத் தேவையில்லை !

இந்தக் கவிதை
உங்கள்
ஞானக்கதவின்
காலிங் பெல்லை
வெறிகொண்டழுத்தத்
தேவையில்லை !

இந்தக் கவிதை
உங்கள்
அழகான மூளையை
ஆர்காசம்
அடையச் செய்யத்
தேவையில்லை !

இந்தக்கவிதை
நீங்கள்
தேநீர் அருந்தும்போது
அருகில்
பிஸ்கட் இல்லாத
குறையைத் தீர்த்தாலே
பெரும்பாக்கியம் !

எழுதியவர் : குருச்சந்திரன் (1-Feb-15, 11:53 pm)
பார்வை : 220

மேலே