எங்க ஊர் திருவிழா

உறவுகளை அழைக்க
சென்ற அப்பாவுடனே
சேர்ந்து வந்துவிடும்
அக்கா குழந்தைகளும்...

முன்னிரவே போடுகின்ற
கோலத்திற்கு கிடைக்கின்ற
தம்பி தங்கைகளின்
உதவிகளும் உடன்
உபத்திரங்களும்...

சொல்லாமலேயே பசியறிந்து
வந்ததும் வராமலும்
பெரியம்மா வைக்கும்
இரத்தப் பொரியலும்
போட்டி குழம்பும்...

கோவிலை சேர்வதற்குள்
கூழ்பானையையும்..
விளக்குமாவு தட்டையும்
கைமாற்றி கொள்ளும்
சித்தி மகள்களும்...

கல்யாணம் முடித்துபோன
வயதை மறந்து
பழகிய தோழிவட்டங்களின்
சந்திப்பில் கிசுகிசுக்களும்..
சிரிப்பு சத்தமும்..

பொங்கலுக்கு சுடுஅடுப்பைவிட்டு
காத்திருந்து ஒன்றாகவே
படையல் போடும்
அண்ணிகளாக வைக்காத
அத்தை மகள்களும்..
மாமன் மகள்களும்..

காவலுக்கு வரும் சித்திகளோடும்
அக்காக்களோடும் கூட்டத்தோடு
சென்று வாங்கும் வளையல்களும்...
விளையாடும் ரங்கராட்டினமும்...

இந்த வருடமும்
வரமுடியாமல் வேலைக்கு
சென்று கான்ட்ராக்ட்-ல்
இருக்கும் அண்ணன்களும்...
மாமன்களும்...

இப்படியே நீளும்
நினைவுகளோடு..

நெருங்குவது திருவிழாவிற்கு
குறித்த நாளென்று மட்டும்
எப்படி சொல்ல முடியும்...

எழுதியவர் : மணிமேகலை (22-Apr-15, 10:20 am)
பார்வை : 1000

மேலே